குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஃபைசர் சப்ளை போதாது.. கோவாக்சின்தான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை
டெல்லி: குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆரம்பித்து, 80 சதவீதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
12 முதல் 18 வயதுக்குட்பட்ட வயதில் நமது நாட்டில் சுமார் 13 கோடி குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டுமானால், குறைந்தது 210 மில்லியன் டோஸ்களைப் பெற வேண்டியிருக்கும்.
அமெரிக்காவின், ஃபைசர் நிறுவன எம்ஆர்என்ஏ தடுப்பூசி ஐரோப்பிய ஒன்றியத்தில் 12-15 வயதுடைய இளம் பருவத்தினருக்கு பயன்படுத்த சோதனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பூசியை இந்தியா பெறுவதில் சிக்கல்கள் நிலவுவதால், கோவாக்சின் தடுப்பூசியைதான் குழந்தைகளுக்கு நாம் பயன்படுத்த முடியும் என்கிறார் ஒரு அரசு உயர் அதிகாரி.
ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் நமக்கு கிடைத்தாலும் கூட, அது குழந்தைகளுக்கு செலுத்த போதாது. சப்ளை மிகக் குறைவு என்று அந்த அதிகாரி கூறினார்.
பைசரின் தடுப்பூசிகள் இந்தியாவுக்கு எவ்வளவு விரைவில் வரக்கூடும் என்பதில் நிச்சயமற்ற நிலை உள்ளது. எனவே, இதனுடன் ஒப்பிடும்போது, பாரத் பயோடெக்தான் நமது தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் தங்களது கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை, 2 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளது. சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தால், அதை இந்திய குழந்தைகளுக்கு செலுத்த வாய்ப்பு ஏற்படும்.
ஃபைசரிடமிருந்து நாம் பெறுவது ஐந்து கோடி டோஸ்தான். 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே நாம் 12-18 வயதுக்கு இடையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமானால், குறைந்தது 80 சதவீதம் பேருக்காவது செலுத்த வேண்டும். எனவே, ஃபைசரின் அளவு போதுமானதாக இருக்காது, என்று ஒரு அதிகாரி தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.