பிரபாகரன் தீவிரவாதியா? விடுதலைக்காக போராடிய மாவீரர்- ராஜ்யசபாவில் பாஜகவின். திரிவேதிக்கு வைகோ பதில்
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ராஜ்யசபாவில் பாஜக எம்.பி. திரிவேதி தீவிரவாதி என கூறியதற்கு பிரபாகரன் விடுதலைக்காகப் போராடிய மாவீரர் என வைகோ பதிலடி கொடுத்தார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடந்த வாரம் ராஜ்யசபாவின் ஒரு தீர்மானத்தின் சுருக்கமான முன்வரையை அறிமுகம் செய்து இருந்தார். அப்படி பல உறுப்பினர்கள் பல தீர்மானங்களைத் தாக்கல் செய்து இருப்பார்கள்.
எந்தத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்பதை குலுக்கல் சீட்டு மூலம் தேர்ந்து எடுப்பார்கள். அந்தத் தீர்மானத்தின் மீது விரிவான கருத்துப் பரிமாற்றத்திற்கு இடம் தருவார்கள்.
வைகோ தீர்மானம்
அப்படி நடைபெற்ற குலுக்கலில் வைகோ பெயர் முதலாவதாகத் தேர்வு பெற்றது. இதையடுத்து நேற்று 29.11.2019 ராஜ்யசபாவில் அத்தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மாநில சுயாட்சி
வைகோ தீர்மானத்தைத் தாக்கல் செய்து 30 நிமிடங்கள் நீண்ட விளக்கம் அளித்து உரை ஆற்றினார். அப்போது, பேரறிஞர் அண்ணா மாநில சுயாட்சிக்காக எழுப்பிய குரல், கருணாநிதி 1974 இல் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், அவர் அமைத்த ராசமன்னார் குழு அளித்த பரிந்துரை, அகாலிதளம் கட்சியின் அனந்தபூர் சாகேப் தீர்மானம், தேசிய மாநாட்டுக் கட்சி, காஷ்மீர் மாநிலத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சி மாநாடு தீர்மானம், கல்கத்தாவில் சிபிஎம் ஜோதிபாசு இடதுசாரிகள் நிறைவேற்றிய தீர்மானம், அனைத்தையும் விவரித்தார்.
மாநிலங்களுக்கு அதிகாரங்கள்
மாநில சுயாட்சி உரிமைக்காக வலுவாக குரல் எழுப்பினார் வைகோ. இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் வைகோ.
வைகோ தீர்மானம் மீது விவாதம்
ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து விரிவான விவாதம் நடைபெற்றது. சுக்லா- பா.ஜ.க ; ஜெயராம் ரமேஷ்- காங்கிஸ்; அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்; டெரிக்.ஓ.பிரையன்- திரிணமுல் காங்கிரஸ்; . விஜிலா சத்தியானந்த்- அதிமுக; . விஷம்பர் பிரசாத் நிஷாத்- சமாஜ்வாதி; டாக்டர் அமர பட்நாயக்- பிஜூ ஜனதா தளம்; டி.கே.ரங்கராஜன்- சிபிஎம்; பேரா மனோஜ் குமார் ஜா- ராஷ்ட்ரிய ஜனதா தளம்; ராகேஷ் சின்கா- பா.ஜ.க.; சஞ்சய் சிங்- ஆம் ஆத்மி;. சுதஷன்ச திரிவேதி- பா.ஜ.க;; சுதான்சு திரிவேதி ஆகிய 13 எம்.பி.க்கள் இத்தீர்மானம் மீது உரையாற்றினர். வைகோவின் தீர்மானத்தையும், அவரது பேச்சு ஆற்றலையும் வெகுவாகப் பாராட்டி, பல கோணங்களில் கருத்துகளை எடுத்து உரைத்தார்கள்.
விடுதலைக்காக போராடிய மாவீரர்
பாஜக எம்.பி. திரிவேதி பிரபாகரன் பற்றி விமர்சித்தபோது, பிரபாகரன் விடுதலைக்காகப் போராடிய மாவீரர் என்று வைகோ ஓங்கி முழங்கினார். விவாதம் நிறைவு பெறவில்லை.
டிச.13-ல் மீண்டும் விவாதம்
வைகோவின் இத்தீர்மானம் மீது வரும் 13-ந் தேதியும் விவாதம் தொடரும். அதன்பிறகு அனைவரது கருத்துகளுக்கும் வைகோ விளக்கம் அளிப்பார்.