பயணங்கள் முடிவதில்லை.. இன்று குடும்பத்துடன் அத்வானியை சந்தித்து வாழ்த்து பெற்ற வைகோ!
டெல்லி: ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகி உள்ள மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
23 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜ்யசபாவுக்குள் எம்.பி.யாக நுழைகிறார் வைகோ. இதையடுத்து டெல்லி சென்றுள்ள வைகோ முதல் நாளில் நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் உள்ளிட்ட் தலைவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை வைகோ சந்தித்தார். பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, ஓடோடி வந்து வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தார். பரம எதிரிகளான வைகோவும் சுப்பிரமணியன் சுவாமியும் ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
இதனையடுத்து வைகோவை தமிழக எம்.பி.க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் லோக்சபா எம்.பியுமான திருமாவளவன், வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் முன்னாள் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவையும் வைகோ சந்தித்து பேசினார். பின்னர் பாஜக மூத்த தலைவரான முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானியை குடும்பத்துடன் சென்று சந்தித்து வைகோ வாழ்த்து பெற்றார்.