இளைய தம்பி! குடும்பத்தோடு விருந்துக்கு வாங்க... வைகோவுக்கு மன்மோகன்சிங் அழைப்பு
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான வைகோ இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது ராஜ்யசபாவில் நேற்று வைகோ பேசியதற்கு மன்மோகன்சிங் பாரட்டு தெரிவித்ததாக மதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை மிக கடுமையாக விமர்சித்து பேசினார் வைகோ. திமுக கூட்டணியின் எம்.பி.யாக இருந்த போதும் காங்கிரஸை வெளுத்து வாங்கினார் வைகோ.
இது விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை வைகோ சந்தித்து பேசினார். இது தொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று வைகோ டெல்லியில் சந்தித்தார்கள். அரைமணி நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மன்மோகன் சிங், மிஸ்டர் வைகோ எனக்கு 86 வயது ஆகின்றது. நான் உங்களுடைய மூத்த அண்ணன். நீங்கள் என்னுடைய இளையதம்பி. என் குடும்பத்தில் ஒருவர்.
உங்களைப் போன்ற தலைவரைக் காண்பது அரிது. நேற்று நீங்கள் மாநிலங்கள் அவையில் உரையாற்றியதைப் பார்த்தேன். அருமையாக இருந்தது. உங்கள் குடும்பத்தோடு என் வீட்டுக்கு விருந்துக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சென்னையில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டு நீங்கள் பேசும்போதே என்னை மிகவும் பாராட்டினீர்கள். அதற்காக நன்றி என்று வைகோ தெரிவித்தார். இவ்வாறி மதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.