நேரில் சந்தித்த நீரும் நெருப்பும்.. நிர்மலா சீதாராமனுடன் வைகோ திடீர் சந்திப்பு.. என்னாவா இருக்கும்?
நிர்மலா சீதாராமனை வைகோ சந்தித்து பேசி உள்ளார்.
டெல்லி: நீரும் நெருப்பும் ஃப்ரண்ட்ஷிப் ஆனது என்பதுபோல மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசி இருக்கிறார்.
எப்போது திமுக கூட்டணியில் முழுசாக தன்னை வைகோ இணைத்து கொண்டாரோ, அந்த நொடியிலிருந்தே பாஜகவை அதிலும் பிரதமரை விமர்சனம் என்ற பெயரில் உண்டு இல்லை என்று ஆக்கி வருகிறார்.
மோடி தமிழகத்துக்கு வருகிறார் என்றாலே கையில் கருப்பு கொடியுடன் எங்கே நின்று கொண்டிருப்பாரோ என்று நம் பார்வை வைகோ மீதுதான் வந்து விழுகிறது.
நடை, உடை
கடந்த 27-ம் தேதி பிரதமர் மதுரை வந்தபோது, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதேபோலதான் ஆர்ப்பாட்டம் செய்வோம் வரும் 10-ம் தேதியும், 19-ம் தேதியும் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று இப்போதே அறிவித்துவிட்டார். இதை தவிர மோடியின் நடை, உடை, என்று அதையும் வைகோ விட்டுவைக்கவில்லை.
நிர்மலா சீதாராமன்
இந்தநிலையில் நிர்மலா சீதாராமனை தேடி சென்று வைகோ சந்தித்து பேசியிருக்கிறார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் டெல்லி போன வைகோ, இந்த சந்திப்பை நடத்தி இருக்கிறார். எம்பி தேர்தல் நெருங்க போகிறது... திமுகவுடன் கூட்டணி நெருக்கம் கூடிவிட்டது... பாஜகவுக்கு ஆகாத முதல் நபர் என்ற பெயரும் வைகோவுக்கு கிடைத்த நிலையில், மத்திய அமைச்சரை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போட்டோ
கூட்டணி சம்பந்தமாக இன்னும் திமுக தரப்பு உறுதியாக சொல்லாத நிலையில் இப்படி ஒரு சந்திப்பு நடந்ததையும் கவனிக்க வேண்டி உள்ளது. இந்த விஷயத்தை போட்டோவுடன் நிர்மலா சீதாராமன் பகிர்ந்து உள்ளார்.
முன்னாள் எம்பி
அதுவும் எப்படி தெரியுமா? "மதிமுக பொதுச்செயலாளர்" என்றில்லை, "முன்னாள் எம்பி"யுடன் சந்திப்பு என்று பதிவு செய்திருக்கிறார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டாலும் எங்கேயோ லேசா இடிக்கத்தான் செய்கிறது.