ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்
டெல்லி: 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் எம்பியாக அடி எடுத்து வைத்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வைகோ இயல்பாகவே உணர்ச்சி பொங்க பேசி மக்களை கவரக்கூடியவர். இவர் கடைசியாக 1999ம் ஆண்டு சிவகாசி தொகுதி எம்பியாக தேர்வாகி நாடாளுமன்றம் சென்றார். அதன்பிறகு நடந்த எந்த தேர்தலிலும் வைகோ எம்பியாகவில்லை. வைகோவின் அரசியல் நகர்வுகள், அதிமுக,திமுக என மாறி மாறி இருந்த நிலையில், இடையில் தேமுதிக தலைமையில் தனி அணியும் அமைத்து பார்த்தார்.
ஆனால் அதற்கு முற்றிலும் வரவேற்பு இல்லாத நிலையில், மீண்டும் திமுகவுடன் கைகோர்த்தார். இந்த சூழலில் திமுக சார்பில் ராஜ்யசாபா எம்பியாக நிறுத்தப்பட்டு போட்டியிட்டின்றி வைகோ வெற்றியும் பெற்றுள்ளார்.
அதேநேரம் எம்பியாக தேர்வு செய்யப்படவிருந்த நேரத்தில் தேசதுரோக வழக்கில் வைகோவுக்கு நீதிமன்றம் ஓராண்டு தண்டனை விதித்து. இதனால் எம்பியாவாரா என்று பரபரப்பு நிலவிய நிலையில், இன்று வெற்றிகரமாக எம்பியாக பதவியேற்றுள்ளார். இன்று நாடாளுமன்றம் சென்ற உடன் வைகோ அங்கிருந்த அண்ணாவின் சிலையை முன் காலை தொட்டு வணங்கினார். இதேபோல் காமராஜர் மற்றும் முத்துராமலிங்க தேவரின் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினார். இதை பார்த்து எம்பிக்கள் பலர் நெகிழ்ந்தனர்.
இந்நிலையில் எம்பியாக பதவியேற்ற வைகோவுக்கு அங்கிருந்த திமுக எம்பிக்கள் உள்பட பல எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். இன்று எம்பியாகி உள்ள வைகோ நாளையே ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளார்கள். வைகோ இனி நாடாளுமன்றத்தில் புலி போல் உருமுவார் என்றும் சிங்கம் போல் கர்ஜிப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக எந்த பிரச்னை குறித்து பேசினாலும் வைகோ புள்ளி விவரத்தை பட்டியலிட்டு அழகாக பேசுவார் என்பதால், நாடாமன்றத்தில் மத்திய அரசின் எந்த திட்டங்கள் தமிழகத்திற்கு எதிராக இருந்தாலும், அதற்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என மதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.