புதிய கல்வி கொள்கை அல்ல; மாநில உரிமைகளை தரைமட்டமாக்கும் புதிய புல்டோசர் கொள்கை- ராஜ்யசபாவில் வைகோ
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது மாநில உரிமைகளை தரைமட்டமாக்கும் புதிய புல்டோசர் கொள்கை என ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடினார்.
ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தது. அப்போது வைகோ எழுந்து குறுக்கிட்டு, நீங்களும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை காலத்தில் கொடும் சிறைகளில் வாடியபோது, இந்தக் கல்வித் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து, பொதுப்பட்டியலுக்கு மாற்றி, அதிகாரங்களை மத்திய அரசு கபளீகரம் செய்துகொண்டது.
இது புதிய கல்விக் கொள்கை அல்ல; மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை ஆகும் என்றார். இதற்கு பதிலளித்த ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, உங்கள் கேள்விக்கு வாருங்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய வைகோ, நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை. அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.
ஒரே நாடு ஒரே மொழி என்கிற திட்டம் எதுவும் இல்லை: வைகோ கேள்விக்கு மத்திய அரசு பதில்
இந்தியா முழுவதும் கல்வியாளர்களோடு நாங்கள் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம் என்று அமைச்சர் சுற்றி வளைத்துப் பேசினார். எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. என் கேள்விக்குப் பதில் இல்லையே! என்றார்.
இதற்கு பதிலளித்த வெங்கையா நாயுடு, உங்கள் வாய்ப்பு முடிந்துவிட்டது. நீங்கள் மூத்த உறுப்பினர். இதற்குமேல் கேட்கக்கூடாது என்றார். ஆனால் வைகோவோ, உறுப்பினரின் உரிமையையும் நீங்கள்தானே பாதுகாக்க வேண்டும். என் கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவே இல்லையே என்றார்.