டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை!
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணா, காமராஜர் மற்றும் முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு ராஜ்யசா எம்.பி. வைகோ மரியாதை செலுத்தினார்.
23 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ இன்று டெல்லி சென்றார். டெல்லி செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இந்தியா மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்றார்.
மேலும் நான் சட்ட நகலை எரித்து சிறை சென்று இருக்கிறேன். பொடா சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் எம்.பி.யாக டெல்லி செல்கிறேன் என நினைவுகூர்ந்தார்.
டெல்லியில் வரவேற்பு
டெல்லி விமான நிலையத்தில் வைகோவுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மதிமுக நிர்வாகிகள் மற்றும் தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் வைகோவுக்கு வரவேற்பளித்தனர்.
அண்ணா சிலை பாதம் தொட்டு
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வைகோ சென்றார். அங்கு லோக்சபா நுழைவாயிலில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையின் முன்பாக மண்டியிட்டு சிலையின் பாதம் தொட்டு வணங்கினார் வைகோ.
தேவர் சிலைக்கு மரியாதை
மேலும் லோக்சபா நுழைவாயிலில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் வைகோ மரியாதை செலுத்தினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும் வைகோ மரியாதை செலுத்தினார்.
வைகோவுக்கு சு.சுவாமி வாழ்த்து
முன்னதாக வைகோவை நாடாளுமன்ற வளாகத்தில் பார்த்த பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சுப்பிரமணியன் சுவாமி இதை தமது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.