விமானங்களில் மாநில மொழிகளில் அறிவிப்புகள்- வைகோவின் கோரிக்கையை ஏற்ற வெங்கையா நாயுடு
Recommended Video
டெல்லி: விமானங்களீல் மாநில மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபாவில் முன்வைத்த கோரிக்கையை சபை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்றுக் கொண்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்கு தெரியப்படுத்த அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக மதிமுக தலைமை நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ராஜ்யசபாவில் வைகோ இன்று பேசுகையில், இன்றைய காலகட்டத்தில், வானூர்திகளில் பறப்பது சொகுசுப் பயணம் அல்ல. இப்போது நேர சேமிப்பைக் கருதி நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர், விவசாயிகள் வானூர்திப் பயணங்கள் மேற்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வேலைகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு விமானங்களில் செல்கின்றனர்.
நான் சிறுவனாக கிராமத்தில் இருந்தபோது, வானத்தில் விமானம் பறப்பதைப் பார்த்து, அதையும் ஒரு பறவை என்றே நினைத்தேன். இன்று விமானப் பயணம் சர்வ சாதாரணமாகிவிட்டது.
சிவசேனா ஆட்சிக்கு வந்தால் நோ புல்லட் ரயில்.. மொத்தமாக கைவிட பிளான்.. மத்திய அரசின் பரபர திட்டம்
புரிந்து கொள்ள முடியவில்லை
ஆனால் வானூர்திப் பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கங்கள், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. பயணிகளால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
பிற நாடுகளில் தமிழ் அறிவிப்புகள்
கோலாலம்பூரில் விமானத்தில் தமிழில் அறிவிப்பு கேட்டு மகிழ்ந்தேன். அதேபோல் சிங்கப்பூர் விமானத்தில், வளைகுடா நாடுகளின் விமானங்களில் தமிழில் அறிவிப்புச் செய்தபோது மகிழ்ச்சியால் சிலிர்த்தேன்.
குறைந்தபட்சம் மாநில மொழிகளில்..
அதுபோல இந்திய வானூர்திகளின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும். குறைந்தது மாநிலத்துக்கு உள்ளேயே பறக்கின்ற வானூர்திகளில் அந்தந்த மாநில மொழிகளிலேயே அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தில் தமிழில் அறிவிப்பு
எடுத்துக்காட்டாக, சென்னையில் இருந்து தமிழ்நாட்டுக்கு உள்ளேயே திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் ஆகிய ஊர்களுக்குப் பறக்கின்ற வானூர்திகளின் அறிவிப்புகள் முதலில் தமிழில் சொல்லப்பட வேண்டும். அதே போல, பயணிகள் தங்கள் உடைமைகளை எந்த இடத்தில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும், மாநில மொழிகளிலேயே அறிவிக்க வேண்டும். என்னுடைய இந்த வேண்டுகோளை, இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரிப்பார்கள் என நம்புகின்றேன். இவ்வாறு வைகோ பேசினார்.
வைகோவுக்கு ஆதரவு
அனைத்து உறுப்பினர்களும் வைகோவின் கோரிக்கை நியாயமானது என்று ஆதரித்தனர். மிகவும் அவசியமானது என்றும் கூறினர். அப்போது சபை தலைவர் வெங்கையா நாயுடு, நாடாளுமன்றத் துறை அமைச்சரைப் பார்த்து, இந்த நியாயமான கோரிக்கையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு உடனே தெரிவித்து செயல்படுத்தச் சொல்லவும் என்றார்.