நேற்று பட்டு.... இன்று கொட்டு... வைகோ-வெங்கையா நாயுடு இடையே லடாய்
டெல்லி: ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவை நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்த நிலையில் இன்று சபையில் அவரிடம் குட்டும் வாங்கியிருக்கிறார் வைகோ.
ராஜ்யசபா எம்.பி.யாக டெல்லி சென்ற வைகோ பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி. ராஜா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். வைகோவின் எதிரியான சுப்பிரமணியன் சுவாமி கூட வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் டெல்லியில் நேற்று ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடுவை மரியாதை நிமித்தமாக வைகோ சந்தித்தார். அப்போது வெங்கையா நாயுடுவுக்கு பட்டு சால்வை போர்த்தி தமது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.
இன்று ராஜ்யசபாவில் பூஜ்ய நேரத்தின் போது வைகோவுக்கு முதல் வாய்ப்பை வழங்கினார் வெங்கையா நாயுடு. இந்த வாய்ப்பில் தமிழகத்தில் மத்திய அரசு நாசகார திட்டங்கள் எப்படியெல்லாம் திணிக்கப்படுகிறது என பட்டியலிட்டார் வைகோ.
ஒரே ஒரு வீடியோகால்தான் காரணம்.. எடியூரப்பா ஆட்சி அமைக்க அமித் ஷா ஓகே சொன்னது எப்படி தெரியுமா?
பொதுக்கூட்டங்களில் தொடக்கத்தில் அமைதியாக வைகோ உரையைத் தொடங்குவார். ஒருகட்டத்தில் குரல் அளவு உயரும்.. இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க இடியாய் முழங்குவார். பெரும்பாலான பொதுக்கூட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் வகையில்தான் பேச்சை நிறைவு செய்வார் வைகோ.
அதேபாணியில்தான் ராஜ்யசபாவிலும் இன்று வைகோ பேசினார். தொடக்கத்தில் அமைதியாக மெதுவான குரலில் தொடங்கிய வைகோவின் பேச்சு ஒரு கட்டத்தில் கிடுகிடுவென ஓடியது...பின்னர் முடிக்கும் போது இந்திய அரசை எச்சரிக்கிறேன் என்றார். அப்போது வெங்கையா நாயுடு குறுக்கிட்டு, சபையில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசக் கூடாது; அடுத்தது ரொம்ப வேகமாக பேசக் கூடாது என குட்டு வைத்தார்.
ஆம் நேற்று பட்டு இன்று குட்டு!