நேற்று மோடி துவக்கி வச்ச வந்தே பாரத் ரயில்.. நடுவழியில் ரிப்பேர்.. நாளை பயணம் தொடங்குமா?
டெல்லி:பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாளை தமது முதல் பயணத்தை இந்த ரயில் துவங்க உள்ள நிலையில் கோளாறு சரி செய்யப்படுமா என்று தெரியவில்லை.
பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், அதி வேகத்தில் செல்லும் ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தயாரிக்கப்பட்டது. ரயிலில் இன்ஜின் இல்லாமல் அதிவேகமாக இயங்கக்கூடிய இந்த ரயிலுக்கு வந்தே பாரத் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் வாராணசி வரையிலான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் ரயில் நேற்று தொடங்கியது. முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டு 16 பெட்டிகளை கொணடு ரயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் தொடக்க ஓட்டத்தில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சாதனை புரிந்தது. இந்த ரயில், வர்த்தக ரீதியிலான பயணத்தை நாளை துவங்குகிறது. வாரணாசியில் இருந்து இந்த ரயில் திரும்பி வந்து கொண்டிருந்த போது மாட்டின் மீது மோதி, தமது முதல் பயணத்திலேயே ரயில் பழுதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழுதான ரயிலில் இருந்தவர்கள் பிற ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். ரயில் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், தொழில்நுட்ப கோளாறு தற்போதைக்கு சீரமைக்க முடியாததாக உள்ளது என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, நாளை தமது முதல் பயணத்தை இந்த ரயில் துவங்குமா என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.