இலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்
டெல்லி: இலங்கை புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சேவை சந்தித்தது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் லோக்சபாவில் நோட்டீஸ் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் லோக்சபாவில் விதி 197 இன் கீழ் ரவிக்குமார் அளித்துள்ள கவன ஈர்ப்பு நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது:
போர்க்குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை இலங்கை இப்போது தனது அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. தனது தேர்தல் பிரச்சாரத்தின்போதே தான் வெற்றிபெற்றால் உள்நாட்டு யுத்தத்தின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பது தொடர்பாக ஐநா மனித உரிமைக் கவுன்சிலோடு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்கப்போவதில்லை என அறிவித்திருந்தார் கோத்தபாய.
அது சர்வதேச சட்டங்களை மீறியது மட்டுமல்ல இனப்படுகொலைகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர்களை அச்சுறுத்துவதுமாகும். அஞ்சியபடியே தேர்தல் முடிந்ததும் அடையாளம் காணப்படாத சிங்களவர்கள் கெகல்லெ என்னுமிடத்தில் தமிழர்கள்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தமிழ் மக்களின் பாதுகாப்புகுறித்து அந்த அரசுடன் பேசினாரா? வெளியுறவுத்துறை அமைச்சரிடமிருந்து ஒரு விளக்க அறிக்கையை இந்த சபை எதிர்பார்க்கிறது.
இவ்வாறு ரவிக்குமாரின் கவன ஈர்ப்பு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.