பாத்திமா லத்தீப் மரணம்... உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுக... அமைச்சரிடம் திருமா மனு
டெல்லி: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து திருமாவளவன் எம்.பி.மனு அளித்துள்ளார்.
இன்று பிற்பகல் நடைபெற்ற அந்தச் சந்திப்பின் போது ஐஐடியில் தொடரும் தற்கொலைகள் பற்றியும், அங்கு ஏற்பட்டிருக்கும் சாதிய பாகுபாடு பற்றியும் திருமாவளவன் விரிவாக மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தார்.
திருமாவளவனின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
பெரும் தாக்கம்
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தமிழக மக்களிடையே அதுவும் குறிப்பாக கல்வியாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. பாத்திமாவை தற்கொலைக்கு தூண்டிய 3 பேராசியர்கள் மீது கடும் நடவடிக்கை கோரி அவருடைய தந்தை அப்துல் லத்தீப் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், டிஜிபி திரிபாதி ஆகியோரை நேரில் சந்தித்து கேட்டுக்கோண்டார்.
அரசியல் தலைவர்கள்
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும், அறிக்கைகள் காரணமாக, பாத்திமா லத்தீப் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
உயர்மட்ட விசாரணை
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்த திருமாவளவன் எம்.பி., பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மாணவி அலைபேசியில் குறிப்பிட்டிருந்த பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதோடு அது தொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்தார்.
உளவியல் நிபுணர்
மேலும், ஐஐடி மாணவர்களுக்கு உளவியல் நிபுணர்களை கொண்டு கவுன்சிலிங் அளிக்கப்பட வேண்டும் எனவும் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். அது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ரமேஷ் பொக்ரியால் உறுதியளித்துள்ளார்.