சுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்
டெல்லி: நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சிறைவாசங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்து சொத்துகளை பறிகொடுத்தவர் வீர சாவர்க்கர்; அவர் பாரத ரத்னா விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
நியூஸ் 18 டிவி சேனலுக்கு அமித்ஷாஅளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து கேள்வி எழுப்புகிறவர்கள் இந்த தேசத்தின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள். அவர்கள் பாவச்செயல்களை செய்கின்றனர்.
வீர சாவர்க்கர் போன்ற ஒரு சில தேசபக்தர்களைத்தான் பார்க்க முடியும். வீர சாவர்க்கர் குடும்பத்தினரைப் போல நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பங்கள் சிலவற்றைத்தான் பார்க்க முடியும்.
நாட்டில் வீர சாவர்க்கர் குடும்பத்தினரது சொத்தை தவிர வேறு எவரது குடும்பத்தினது சொத்தும் பலமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த நாட்டில் வீர சாவர்க்கரைப் போல சிறையில் சித்தரவைகளை அனுபவித்தவர்கள் வேறு யாரும் இல்லை; கயிற்றில் இருந்து தேங்காய் எண்ணெய் பிழிந்து எடுக்க வேண்டும் என்று துன்புறுத்தப்பட்டவர் சாவர்க்கர்.
இந்த நாட்டில் வேறு வீர சாவர்க்கர் சகோதரர்களைப் போல எந்த ஒரு சகோதரர்களும் 12 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தது இல்லை. 12 ஆண்டுகாலம் சிறையில் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடவில்லை.
சாவர்க்கரின் தியாகத்துக்கு பாரத ரத்னா விருது தகுதியான ஒன்று. 1857-ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியை முதலாவது இந்திய சுதந்திரப் போர் எனப் பெயர் சூட்டி பிரகடனம் செய்தவர் வீர சாவர்க்கர்தான்.
இந்து ராஷ்டிரா என்பது பற்றி ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான கற்பனைகளை கொண்டிருக்கிறார்கள். இந்தியா என்பது அரசியல் சாசனத்தின்படிதான் செயல்படும். இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.