101 நாட்கள் காத்திருந்து இன்று எம்.பி.யாக பதவியேற்றார் கதிர் ஆனந்த்... தமிழில் உறுதிமொழி
டெல்லி: வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கதிர் ஆனந்த் இன்று முறைப்படி நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது தமிழில் அவர் உறுதிமொழி கூறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், 101 நாட்கள் காத்திருந்து கதிர் ஆனந்த் இன்று எம்.பி. பொறுப்பை ஏற்றுள்ளார்.
அவையின் மையத்திற்கு அவர் பதவியேற்க வரும் போது திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.
இன்று பதவியேற்பு
திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, சி.வி.சண்முகத்தை சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆக.9-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று தான் கதிர் ஆனந்த் வேலூர் எம்.பி.யாக முறைப்படி நாடாளுமன்றத்தில் பதவியேற்றுள்ளார்.
முதல் நாள்
நாடாளுமன்றத்தில் அவையின் மையப்பகுதிக்கு வந்த கதிர் ஆனந்த், தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இவர் பதவியேற்கும் போது அவையில் பிரதமர் மோடி இல்லை. முதல் நாள் நாடாளுமன்ற அலுவலில் கலந்துகொண்டுள்ளதால் கதிர் ஆனந்த் பதவியேற்க வரும்போதே சற்று படபடப்புடன் காணப்பட்டார்.
கட்கரிக்கு வணக்கம்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டு பதவியேற்ற கதிர் ஆனந்தை, ராம் விலாஸ் பாஸ்வான் தனக்கு அருகில் இருந்த மற்றொரு அமைச்சரிடம் திமுகவின் துரைமுருகன் மகன் என விளக்கினார். பதவியேற்ற பின்னர் சபாநாயகருக்கு மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவித்த கதிர் ஆனந்த், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவுக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு இருக்கைக்கு சென்றார்.
கண்டு ரசிப்பு
மகன் கதிர் ஆனந்த் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதை தொலைக்காட்சியில் பார்த்த திமுக பொருளாளர் துரைமுருகன் புளங்காகிதம் அடைந்தாராம். மேலும், அவரது ஆதரவாளர்கள் வேலூரில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.