அப்செட்டில் வெங்கையா.. கூல் செய்ய பிரதமர் மோடி போடும் பிளான்- ‘அந்த லிஸ்ட்டில் மூன்றாவது ஆள்’ ஆவாரா?
டெல்லி : குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சமாதானம் செய்யும் வகையில், அவர் மீண்டும் குடியரசுத் துணை தலைவர் ஆக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
துணை குடியரசுத் தலைவர் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைய இருக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டார் வெங்கையா நாயுடு.
பா.ஜ.கவின் மூத்த தலைவராக இருந்த வெங்கையா நாயுடு, நீண்டகாலமாக கட்சிக்கு பணியாற்றி வருபவர், அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கட்சிக்குள்ளேயே ஆதங்கம் நிலவுகிறது.
விடாதீங்க! டெல்லி போலீஸ் மீது ஓம் பிர்லா, வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் எம்பிக்கள் சரமாரி புகார்
குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக்காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
குடியரசுத் தலைவர் வேட்பாளர்
குடியரசுத் துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு ஆளும் கட்சியான பாஜகவின் சார்பில் இந்த முறை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற பேச்சு முன்னர் அடிபட்டது. ஆனால், பா.ஜ.க வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
துணை ஜனாதிபதி
இந்நிலையில், துணை குடியரசு தலைவர் பதவியை மீண்டும் வெங்கையா நாயுடுவுக்கே வழங்கலாமா என்பது குறித்து பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில், தனக்கு இனி பாஜக அரசியலில் பெரிய எதிர்காலம் இல்லை என்பதால் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வருகிறார் வெங்கையா நாயுடு.
வெங்கையா நாயுடு
பா.ஜ.கவின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடு, அக்கட்சியின் தேசியத் தலைவர், மத்திய அமைச்சர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2014-ல், பிரதமர் மோடி அமைச்சரவையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த அவர், 2017-ல் துணை ஜனாதிபதி ஆக்கப்பட்டார். பா.ஜ.கவின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மூலமாக பா.ஜ.கவுக்கு வந்தவர் வெங்கையா நாயுடு.
ராஜ்யசபா தலைவர்
அரசியலில் ஊறியவரான வெங்கையா நாயுடு தனது பேச்சாற்றல், நாடு முழுவதுமுள்ள அரசியல் தலைவர்களுடனான நட்புறவு ஆகியவற்றில் சிறப்பு பெற்றவர். அவர் இந்த முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் திமுக கூட ஆதரவளிக்கும் என்ற நிலை இருந்தது. அந்த அளவுக்கு மற்ற கட்சித் தலைவர்கள் உடனும் நட்பைப் பேணுபவர்.
வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு இந்த முறை குடியரசுத் தலைவர் ஆக்கப்படுவார் என பேச்சுகள் எழுந்தது. வெங்கையா நாயுடுவுமே கூட அந்த விருப்பத்தில்தான் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், பாஜக மேலிடத்தின் முடிவால் வெங்கையா நாயுடு தற்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை பாஜகவின் முன்னணி தலைவர்களிடமும் வெளிப்படுத்தி இருக்கிறார் வெங்கையா நாயுடு.
அதிருப்தி
பாஜகவில் மூத்த தலைவராக இருந்த வெங்கையா நாயுடு, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்க ஆதரவு தந்தவர். இப்போது அவர் பிரதமர் மோடி உள்ளிட்டோராலேயே புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடமும் தன் வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார் வெங்கையா நாயுடு.
சமாதானம்
இதையடுத்து, வெங்கையா நாயுடுவை பிரதமர் மோடி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. கட்சியின் எதிர்காலம் கருதியே இப்படியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இப்போது ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை குடியரசுத் தலைவர் ஆக்குவது வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்கும், அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு பெரிதும் கை கொடுக்கும் எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை ஜனாதிபதி
மேலும், அவரை சமாதானப்படுத்தும் வகையில், துணை ஜனாதிபதி பதவியில் மீண்டும் அவரையே கொண்டு வரலாமா என்பது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆகஸ்டில் வெங்கையா நாயுடுவின் பதவிகாலம் நிறைவடைவதால் விரைவில் இதுகுறித்த பேச்சுகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கலாம்.
இரண்டு முறை
இதற்கு முன்னதாக இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இரண்டு முறை, அதாவது 10 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருந்தார். 2007ல் துணை குடியரசுத் தலைவராக பதவிக்கு வந்த முகமது ஹமீது அன்சாரி 10 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருந்தார். தற்போது வெங்கையா நாயுடு மீண்டும் குடியரசு துணைத் தலைவர் ஆக்கப்பட்டால் இரண்டு முறை தொடர்ந்து பதவி வகிக்கும் மூன்றாவது குடியரசு துணைத் தலைவர் ஆவார்.