கவிதைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்... வெங்கய்ய நாயுடு யோசனை
டெல்லி: பள்ளி பாடத்திட்டத்தில் கவிதைகளை கட்டாயம் சேர்க்க வேண்டும் என துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
உலக கவிஞர்கள் மாநாட்டை டெல்லியில் தொடங்கிவைத்து பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், நாட்டிற்கு மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படுவது போல், எழுத்தாளர்களும், கவிஞர்களும் தேவைப்படுவதாகவும், அவர்கள் நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள் எனவும் புகழாரம் சூட்டினார்.
கவிதைகளால் மனிதர்களிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்த முடியும் என்றும், அதனால் கவிதைகளை பள்ளிப்பாடத்திட்டத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக பேசினார். கவிதைகள் சமூக மாற்றத்துக்கு முக்கிய காரணியாக திகழ்வதாக வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
நாட்டில் வளமான சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் கவிதைகளும், கவிஞர்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும், புதுமையான படைப்புகள் இல்லாவிட்டால் சமூகம் தேங்கி விடும் என்றும் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சைக் கேட்டு கூட்டத்தில் திரண்டிருந்த சர்வதேச அளவிலான கவிஞர்கள் பெருமிதம் அடைந்ததோடு கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்திய பாரம்பரியம் கவிதைகளோடு நெருங்கிய தொடர்புடையது என்றும், ராமாயணமும், மகாபாரதமும் கவிதை நடையில் எழுதப்பட்டவைகள் எனவும் பெருமிதம் தெரிவித்தார். ஒரு மொழியை பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த மொழியில் உள்ள இலக்கியங்களை ஊக்குவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.