ஜம்மு, இமாச்சல் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..இந்திய வானிலை மையம் அறிவிப்பு
டெல்லி:கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக பனிப்பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாசலப் பிரதேச மாநிலங்களில் பனியின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.
அவ்விரு மாநிலங்களின் பெரும்பாலான நகரங்கள் பனிப்படர்ந்து வெண்பட்டு போர்த்தியது போல் காட்சி யளிக்கின்றன. இந்நிலையில், இவ்விரு மாநிலங்களிலும் 5 வது கட்டப் பனிப்பொழிவு வரும் செவ்வாய்கிழமை வரை கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கும்.
உத்தராகண்ட் மாநிலத்திலும் லேசானது முதல் மிதமானது வரை பனிப்பொழிவு நிலவும் வாய்ப்புகள் உள்ளன. அதனால், மலைப் பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.