4 மாசத்துக்கு ராமர் கோவில் போராட்டத்துக்கு லீவு விடுறோம்.. இன்ப அதிர்ச்சி தரும் விஎச்பி
டெல்லி: ராமர் கோவில் போராட்டங்களை நான்கு மாத காலத்திற்கு நடத்துவதில்லை என்ற முடிவை விஸ்வ இந்து பரிஷத் எடுத்துள்ளது. இது இன்ப அதிர்ச்சி என்பதை விட லோக்சபா தேர்தலில் பாஜகவின் நிலை படு மோசமாகி விடக்கூடாது என்ற அச்சத்தில் எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்கப்படுகிறது.
அதேசமயம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகே உள்ள 67 ஏக்கர் நிலத்தை நிலத்தின் உரிமையாளரான ராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பிடம் ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் பாஜக மத்திய அரசு மனு செய்துள்ள பின்னணியில் இந்த அறிவிப்பை விஎச்பி வெளியிட்டுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதுதான் விஎச்பியின் நீண்ட கால கோரிக்கை, போராட்டம் ஆகும். இதுதொடர்பாக நாடு முழுவதும் அது பல்வேறு இயக்கங்களையும் நடத்தி வருகிறது. சமீபத்தில் நாடு முழுவதும் இதுதொடர்பாக கூட்டங்களையும் நடத்தி முடிவில், ராமர் கோவில் கட்ட தனிச் சட்டம் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
கடந்த வாரம் அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவிலும் கூட இதே கோரிக்கையை வைத்து தீர்மானமும் போட்டது. இந்த நிலையில்தான் ராமர் கோவில் தொடர்பாக அடுத்த நான்கு மாதங்களுக்கு போராட்டங்கள் எதையும் நடத்தப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளது விஎச்பி.
தேர்தலை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் சமயத்தில் போராட்டங்கள் நடத்தி, அது திசை திரும்பி பாஜகவுக்கு பாதகமாகி விடுமோ என்ற அச்சமே இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள்.
இதுகுறித்து விஎச்பியின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், நான்கு மாதங்களுக்கு நாங்கள் எந்தப் போராட்டத்தையும் நடத்த மாட்டோம். தேர்தல் சமயத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துப் போராட்டம் நடத்தினால் அது தேர்தல் பிரச்சினையாகி விடும், அதில் அரசியல் புகுந்து விடும் என விஎச்பி கருதுகிறது. எனவே இந்த விவகாரத்தில் அரசியல் புகாமல் காக்க விஎச்பி விரும்புகிறது. எனவே நான்கு மாதங்களுக்கு அனைத்தையும் தள்ளிப் போட்டுள்ளோம் என்றார்.