துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் வீட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 96, 671 ஆக உயர்ந்திருக்கிறது.
அதேநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குண்மடைந்தோர் எண்ணிக்கை 51,27,600 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துணை ஜனாதிபதி அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு வழக்கமான கொரோனா பரிசோதனைகள் இன்று காலை மேற்கொள்ளப்பட்டன. இதில் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். வெங்கையா நாயுடு தற்போது நலமுடன் இருக்கிறார். அவரது மனைவி உஷா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.