ஆக.6-ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்; ஜூலை 5-ல் வேட்புமனுத் தாக்கல்- தேர்தல் ஆணையம்
டெல்லி: நாட்டின் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. ஆகையால் அதற்கு முன்னதாக புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்.
இதனயடுத்து தலைமை தேர்தல் ஆணையம் துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 5-ல் தொடங்கும்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 19
துணை ஜனாதிபதி தேர்தல்- வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும் நாள் ஜூலை 20
நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நாள் ஆகஸ்ட் 6.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கய்யா நாயுடு பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 68 ஆவது பிரிவில், இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்காலம் நிறைவுறுவதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் - அறிவித்தது தேர்தல் ஆணையம்
இதற்காக, தேர்தல் ஆணையம் அதன் தலைவர் ராஜீவ் குமார் தலைமையில் கூடி, ஆலோசனை நடத்தியது. சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் இந்த தேர்தலை நடத்தி முடிப்பதற்கான பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. அரசியல் சாசன கடமையை நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது.
16 ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அட்டவணையை வெளியிடுவதில் இந்திய தேர்தல் ஆணையம் பெருமிதம் கொள்கிறது என்று அந்த நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் சட்டம் 1952 ன் படி, குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கையை அவரது பதவிக்காலம் முடிவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தின் 66 ஆவது பிரிவின் படி, குடியரசு துணைத் தலைவர் நாடாளுமன்றத்தின் இருஅவைகளின் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். தற்போதைய 16 ஆவது குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 233 மாநிலங்களவை உறுப்பினர்களும், 12 மாநிலங்களவை நியமன உறுப்பினர்களும், 543 மக்களவை உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர். ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தின் 788 உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கிறார்கள்.
இந்த தேர்தலுக்கான அறிவிக்கை ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. ஜூலை 19 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதிநாள். 20 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 22 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான இறுதிநாள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெறும். அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இப்படி வாக்குப்பதிவு நடத்தப்பட்டால் அதன் எண்ணிக்கையும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதியே நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.