சபரிமலை சீராய்வு மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. மனுதாரர்களுக்கு பாதி வெற்றி
Recommended Video
டெல்லி: சபரிமலை தீர்ப்பு தொடர்பான சீராய்வு மனு, 7 நீதிபதிகள் அடங்கிய கூடுதல் நீதிபதி அமர்வுக்கு மாற்றப்படுவதாக உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிப்பது கிடையாது என்பது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சீராய்வு
இதை எதிர்த்து பல சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சீராய்வு மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இன்று அது தனது தீர்ப்பை வழங்கியது.
கூடுதல் பெஞ்ச்
அப்போது மூன்று நீதிபதிகள் இந்த வழக்கை மறு ஆய்வு செய்வதற்கு கூடுதல் பெஞ்சுக்கு அனுப்பி வைக்க பரிந்துரை செய்தனர். பாலி நாரிமன், சந்திரசூட் ஆகிய, 2 நீதிபதிகள், தேவையில்லை என்றனர். எனவே பெரும்பான்மை நீதிபதிகள் இந்த முடிவை விரும்பியதால் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
போப்டே தலைமை
வரும் 17ம் தேதியுடன் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து போப்டே தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவரது தலைமையில், 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கு விசாரணையை நடத்த உள்ளது.
ஆச்சரியம் ஆனால் உண்மை
இதில், முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், உச்சநீதிமன்ற வரலாற்றில் சீராய்வு மனு என்பது, 99.9 சதவீதம் டிஸ்மிஸ் செய்யப்படுவதுதான் வழக்கம். ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக இந்த வழக்கு கூடுதல், நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது சீராய்வு மனு தாக்கல் செய்தவர்களின் வாதங்களில், உச்சநீதிமன்றம் ஓரளவுக்கு திருப்தி அடைந்து விட்டது என்றுதான் இதற்கு அர்த்தம்.
பாதி வெற்றி
இது வழக்கு தொடர்ந்தவர்களுக்கு கிடைத்தது பாதி வெற்றி என்று பார்க்கப்படுகிறது. எனவே, 7 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், எந்தப் பக்கம் வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்கக் கூடிய வாய்ப்பு இருப்பதால் ஐயப்ப பக்தர்களுக்கு, தற்போது நம்பிக்கை அதிகரித்துள்ளது.