'கடத்தப்படும்' வாக்குப்பதிவு இயந்திரங்கள்.. பின்னணியில் பாஜக.. வெளியான பரபர வீடியோக்கள்
டெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப் என பல மாநிலங்களிலும், பாஜக நிர்வாகிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளில் ஈடுபடுவது போலவும், அவற்றை கடத்திச் செல்வதை போலவும் பதிவான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
லோக்சபா தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நாளை மறுநாள், வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் அனைத்தும், சீல் வைக்கப்பட்ட அறைகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான், சில பரபரப்பு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் சுற்றி வருகின்றன. அவை அனைத்திலும், பாஜகவினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டும் இடம் பிடித்துள்ளது.
ராகுல், முலாயம், மேனகா காந்தி.. விஐபி வேட்பாளர்கள் வெற்றி ரொம்ப கஷ்டம்.. ஷாக்கிங் எக்ஸிட் போல்
|
கடையில் வாக்குப்பதிவு இயந்திரம்
உத்தரபிரதேச மாநிலம், சன்டௌலி பகுதியில், ஒரு குரூப், வாகனங்களில் இருந்து வாக்குப்பதிவு மெஷின்கள் மற்றும், விவிபேட் இயந்திரங்களை எடுத்து, கடையொன்றில் அடுக்கி வைக்கும் காட்சி ஒரு வீடியோவில் இடம் பிடித்துள்ளது. எக்ஸிட் போல் முடிவுகளில் பாஜக கூட்டணி வெல்வது போல காட்டிவிட்டு, மக்களிடம் அப்படி ஒரு கருத்தை விதைத்துவிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டிய நிலையில், இதுபோன்ற வீடியோ பரபரப்பை அதிகரித்துள்ளது.
|
பஞ்சாப் வீடியோ
பஞ்சாப்பில் படம் பிடிக்கப்பட்டதாக, மற்றொரு வீடியோவும் வைரலாகியுள்ளது. இதை, ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர், பதிவேற்றியுள்ளார். அதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள், கார் ஒன்றில் கிடப்பதாக காட்டப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
|
வேட்பாளர்களுக்கே தெரியாது
வேட்பாளர்களிடம் தகவல் அளிக்காமலேயே, ஜான்சி வாக்குச் சாவடிக்கு ஓட்டு மெஷின்கள் கொண்டுவரப்படுவதை போன்ற மற்றொரு வீடியோவும் வைரலாக சுற்றி வருகிறது. இதுபற்றி பிரசாந்த் பூஷன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், வாக்குப்பதிவு இயந்திரங்களை திருத்துவது மட்டுமின்றி, அவற்றை மாற்றியமைப்பதும் நடக்கிறது என்பது உறுதியாகியுள்ளது என கூறியுள்ளார்.
மிஷின்கள் மாற்றம்
காசிபூர் தொகுதியில் மகாகட்பந்தன் கூட்டணியில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிடும், அப்சல் அன்சாரி, காசிபூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன என்று பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், தொலைபேசியை ஒட்டுக் கேட்பது போல, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் திருத்தம் செய்வது எளிதானது என்றார்.
தேர்தல் ஆணையம் மறுப்பு
இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக வெளியான வீடியோக்கள் அடிப்படையில், தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்றும், காங்கிரஸ் சார்பில் இன்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதுபோன்ற முறைகேடு புகார்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.