வியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு!
டெல்லி: குல்பூஷன் ஜாதவ் வழக்கில், இந்திய அரசின் முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. 15:1 என்ற விகிதத்தில், கிடைத்துள்ள இந்த தீர்ப்பால், குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது.
நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு உலக நாடுகள் அனைத்தாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட ஒன்றாகும்.
ரா ஏஜென்ட் என்று குற்றம்சாட்டி குல்பூஷன் ஜாதவை, 2016 மார்ச் 3ம் தேதி கைது செய்தது பாகிஸ்தான். உளவு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட அவர் பலூசிஸ்தானின் மாஷ்கெல் பகுதியில் ஊடுருவியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
2017ம் ஆண்டு, ஏப்ரல் 10ல், உளவு பார்த்தத குற்றச்சாட்டில், பாகிஸ்தான் ராணுவ தீர்ப்பாயத்தால் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
ஜாதவ் வழக்கில் வியன்னா ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டிய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக, 2017, மே 8ம் தேதி சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும், அதுவரை, ஜாவுக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றக் கூடாது, என்று சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், வியன்னா ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் மீறியுள்ளது என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்ட குட்டு என்பது குறிப்பிடத்தக்கது.