டைம் ஓவர்.. விஜய் மல்லையாவுக்காக இனி காத்திருக்க முடியாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி
விஜய்மல்லையா வழக்கு விசாரணை இன்று சுப்ரீம்கோரட்டில் நடந்தது
டெல்லி: விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் போதுமான கால அவகாசம் வழங்கி விட்டது, இனி காத்திருக்க முடியாது என நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. விஜய் மல்லையா மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜனவரி 18-ம் தேதி விசாரிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
9,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, லண்டனுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையாவை கடந்த 2017ம் ஆண்டு, கர்நாடக ஹைகோர்ட் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்திருந்தது.
இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை மீறி, சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு தன்னுடைய வாரிசுகளுக்கு விஜய் மல்லையா சொத்துகளை மாற்றியதை தொடர்ந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
லண்டன்
ஆனால், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு சென்ற அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதையடுத்து அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை இங்கிலாந்து அரசு கைது செய்தது. ஆனால் அவர் ஜாமீனில் வெளிவந்தார்..
கோர்ட்
இருப்பினும், அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இங்கிலாந்து அரசும், விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து சுப்ரீம்கோர்ட்டின் உதவியை நாடினார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
பணப்பரிவர்த்தனை
இதனிடையே, வெளிநாடு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது... ஆனால் அதனை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தொகையினை குடும்பத்தினருக்கு பரிவர்த்தனை செய்தது தொடர்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்க இருந்த நிலையில் அதனை எதிர்த்து விஜய் மல்லையா சார்பில் மறுஆய்வுமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது...
உத்தரவு
அதையும் ஏற்கனவே நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.. இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் போதுமான கால அவகாசம் வழங்கி விட்டது என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.. இனி விஜயமல்லையாவுக்காக காத்திருக்க முடியாது என்றும், அவர் மீதான மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜனவரி 18-ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.. இதையடுத்து விஜய்மல்லையாவுக்கு மேலும் சிக்கல் கூடிஉள்ளதாக தெரிகிறது.