காங்கிரஸ் முதல்வர்களை கணித்த விஜய் மல்லையா.. உருவானது புதிய சர்ச்சை!
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் யார் என்று விஜய் மல்லையா டிவிட் செய்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
டெல்லி: மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர்கள் யார் என்று விஜய் மல்லையா டிவிட் செய்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் வெற்றிபெறுவது எல்லாம் தற்போது எளிதாகிவிட்டது. பாஜகவை எப்படியாவது தோற்கடித்து, தேர்தலில் வென்றுவிடுகிறது. ஆனால் முதல்வரை தேர்வு செய்வதில்தான் காங்கிரஸ் அதிகமாக திணறுகிறது.
முக்கியமாக ஒரே மாநிலத்தில் வலுவான தலைவர்கள் இரண்டு மூன்று பேர் இருந்தால் அங்கு ஒரு முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் அதிக சிரமங்களை சந்திக்கிறது.
அந்த வகையில் தற்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்று தெரியாமல் காங்கிரஸ் குழம்பி வருகிறது.
சட்டீஸ்கரில் தம்ராத்வாஜ் சாஹு, பூபேஷ் பாகல் மற்றும் டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் முதல்வர் போட்டியில் உள்ளனர். மத்திய பிரதேசத்தில் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியில் உள்ளனர். ராஜஸ்தானில் சச்சின் பைலட், அசோக் கெலாட் போட்டியில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கே முதல்வர் யார் என்று தெரியாத நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா இரண்டு மாநிலங்களில் முதல்வர் யார் என்று தெரிவித்துள்ளார்.
Young Champions @SachinPilot and @JM_Scindia Many congratulations.
— Vijay Mallya (@TheVijayMallya) December 13, 2018
அவர் தனது டிவிட்டில் ''இளம் சாதனையாளர்கள் சச்சின் பைலட் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா'' என்று விஜய் மல்லையா குறிப்பிட்டு இருக்கிறார். இவர் இப்படி டிவிட் செய்திருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் உள்விஷயங்கள் இவருக்கு எப்படி தெரியும் என்று பலரும் கேட்டு உள்ளனர்.
அதேசமயம் காங்கிரஸ் மீது மக்கள் கோபம் கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் இப்படி எழுதியுள்ளார் என்றும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த கோரும் வழக்கில் மல்லையாவிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதால், அவர் எப்போது வேண்டுமானாலும் இந்தியா கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.