கதவு மூடிருக்கு.. ரோடு நல்லாருக்கு.. விகாஸ் என்ன முட்டாளா.. வீடியோ போட்டு வெளுத்த போலீஸ் அதிகாரி
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை கான்பூருக்கு கொண்டு வரும் வழியில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த தாதா விகாஸ் துபேவை சுட்டுக் கொன்றதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் கூறிய காரணங்கள் எதுவும் நம்பும்படி இல்லை. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆஸ்தானா பதிவிட்டு இருக்கும் வீடியோவை நீங்களே பாருங்கள்.
கான்பூர் அருகே 8 போலீசாரை சுட்டுக் கொன்று, ஆறு நாட்கள், நான்கு மாநிலங்களில் சுற்றித் திரிந்து தலைமறைவாக இருந்த தாதா விகாஸ் துபே இன்று என்கவுன்டரில் உபி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்குக் காரணமாக போலீசார் கூறியது, உஜ்ஜனியில் இருந்து கான்பூர் அழைத்து வரும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரின் கார் தடம்புரண்டது. அப்போது தப்பிக்க முயற்சித்த விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று உபி போலீசார் கூறினர்.
ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கார் குறித்த வீடியோவை பதிவு செய்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆஸ்தானா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி விவாதங்களை எழுப்பியுள்ளது.
அவரும் தனது பதிவில், ''கார் எந்தவித சேதாரமும் இல்லாமல், அனைத்து கதவுகளும் மூடப்பட்டு கிடக்கிறது. சாலையின் கண்டிஷனைப் பார்த்தாலும், கவிழ்வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. சுற்றிலும் திறந்தவெளி வயல் உள்ளது. ஒரு முட்டாள் கூட இந்த மாதிரியான சூழல் இருக்கும் இடத்தில் தப்பித்து செல்ல முயற்சிக்க மாட்டார்'' என்று பதிவிட்டுள்ளார்.
ரவுடி விகாஸ் துபே கூட்டாளி சுட்டுக் கொலை... பாஜக எம்எல்ஏவை சந்தித்த விகாஸ்.. என்ன நடக்கிறது உபியில்!
இவரது ட்வீட்டை பலரும் ரீட்வீட் செய்து இவரது சந்தேகத்தையே அவர்களும் எழுப்பியுள்ளனர். காரில் எந்த சேதாரமும் இல்லை, சாய்த்து வைத்தது போல் இருக்கிறது. முன் பக்க கண்ணாடியில் எந்த சேதாரமும் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டு இருந்ததால், காரின் முன்பக்க கண்ணாடியின் வைப்பரை ஆன் செய்து வைத்துள்ளனர். கார் சாய்ந்த பின்னரும் வைப்பர் இயங்கிக் கொண்டு இருக்கிறது. கார் கவிழ்ந்துவிட்டது என்று குறிப்பிடும் உபி போலீசார், குறைந்தது கார் கண்ணாடிகளையாவது உடைத்து இருக்க வேண்டும் அல்லது டயர்கள் கழன்றது போல் காட்டி இருக்க வேண்டும் அல்லது தடுப்பு மீது மோதியது போல் காட்டி இருக்க வேண்டும். கார் தானாக கவிழ்ந்துவிட்டது என்று கூறுவதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை.
OUTRAGEOUS STORY of Vikas Dubey encounter. The vehicle is seen lying "conveniently" on its side, all doors closed. Note the road condition. No reason to overturn "so softly"! Open fields all around! Even a fool with a paunch wud not consider running away in open. pic.twitter.com/8NGT2zx6lT
— Dr. N. C. Asthana, IPS (Retd) (1986-2019) (@NcAsthana) July 10, 2020
அந்தக் காரில்தான் விகாஸ் துபே இருந்தார் என்றால், காரின் கதவுகள் திறக்காமல் எப்படி தப்பித்து இருக்க முடியும். இது மிகப்பெரிய முட்டாள்தனமான செயலாக இருக்கிறது. உடன் சென்ற பத்திரிக்கையாளர்களை சாச்செண்டி பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, விகாஸ் துபேவை டாடா ஃபார்ச்சுன் காரில் இருந்து மகேந்திரா டியுவி 300 காருக்கு மாற்றி அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர்தான் விகாஸ் என்கவுன்டர் அரங்கேறியுள்ளது.