"போல் துபே பண்டிட்".. என்னாச்சு அந்த சண்டித்தனம்.. சரிந்த சாம்ராஜ்ஜியம்.. வேற லெவலில் வாழ்ந்த துபே
விகாஸ் துபே வாழ்நாள் முழுக்க கேடித்தனங்களையே செய்துள்ளார்
டெல்லி: ரவுடி துபே வாழ்ந்த வாழ்க்கையைப் பார்த்தால்.. எப்படி இப்படி ஒரு ரவுடியை இந்த போலீஸ் விட்டு வைத்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. அந்த அளவுக்கு இவர் ஆட்டம் போட்டுள்ளார். அதகளம் செய்துள்ளார். சினிமாவில் வரும் கேங்ஸ்டர்களைத் தூக்கிச் சாப்பிடும் படியான கேடித்தனம் கேப்மாரித்தனத்தை செய்துள்ளார்.
Recommended Video
உண்மையில் போலீஸ் மீதுதான் நிறைய தவறு இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். ஆரம்பத்திலேயே இவர் போன்றோருக்கு ஆப்பு வைத்திருந்தால், எத்தனையோ அப்பாவிகள் உயிர் போயிருக்காது. இன்று போலீஸ் துறையிலேயே கை வைத்து விட்ட காரணத்தால்தான் போலீஸாருக்கு கோபம் வந்து சுட்டுக் கொன்றுள்ளனர்.
விகாஸ் துபே ஒரு பாலிவுட் பிரியர்.. நிறைய சினிமாப் படம் பார்ப்பாராம். அதுவும் டான் கதை என்றால் தனது ரவுடிக் கூட்டத்தோடு சேர்ந்து என்ஜாய் செய்து பார்ப்பாராம். அதில் அவருக்குப் பிடித்த படம் அர்ஜூன் பண்டிட் படம்தான். சஞ்சய் தியோல் நடித்த படம்தான் அர்ஜூன் பண்டிட். 1999ல் வெளியான படம்.
அந்தப் படத்தைப் பார்த்து விட்டு துபேவுக்கு மண்டை கலங்கிப் போச்சாம். அதாவது தன்னையும் அந்தப் படத்தில் வரும் கேங்ஸ்டர் போல நினைக்க ஆரம்பித்து விட்டாராம். இனிமேல் என் பேர் துபே பண்டிட்.. எல்லோரும் பண்டிட்னுதான் என்னை கூப்பிடணும்னு உத்தரவு வேறு. பிறகென்ன துபே.. பண்டிட்டானார். அக்கப்போரும் அதிகரித்தது.
தனது கூட்டத்தார் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள் மத்தியிலும் இவரை பண்டிட் என்றே கூப்பிட்டுள்ளனர். ஏன் போலீஸாரும் கூட பண்டிட் என்றே கூப்பிட்டுள்ளனர். இது போதாதா இந்த ரவுடிக்கு.. மக்களை மேலும் ரணகளப்படுத்த ஆரம்பித்துள்ளார். அர்ஜூன் பண்டிட் படத்தில் ஆரம்பத்தில் சாதுவாக வரும் ஹீரோ சன்னி தியோல் பின்னர் மிக மோசமான ஒரு கேங்ஸ்டராக மாறுகிறார். அவர் ஏன் அப்படி ஆனார் என்பதுதான் படத்தின் கதை. ஈவு இரக்கமே இல்லாத ரவுடியாக அவர் மாற அவரது காதலி அவரை ஏமாற்றியதுதன் காரணம்.
ஒரு வேளை துபேவுக்கும் கூட இப்படி ஏதாவது பேக்கிரவுண்ட் காதலி இருந்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது மனைவியும் கூட துபே போல ஈவு இரக்கமற்றவர் என்றுதான் சொல்கிறார்கள். மனைவியை சமாஜ்வாடி கட்சியில் சேர்த்து விட்டு இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து ரவுடித்தனம் செய்துள்ளார். கூடவே பாஜக தொடர்பும் இருந்தது. பிறகென்ன தட்டிக் கேட்க நாதியில்லை.. வெறியாட்டம் போட்டிருக்கிறது துபே கும்பல்.
அரசியல் தொடர்பு.. ஜாதி கொலை.. உ.பியின் "ராஜனாக" உருவெடுத்த விகாஸ் துபே.. புதுப்பேட்டை ஸ்டைல் வரலாறு!
தற்போது துபே குடும்பத்தையே உபி போலீஸ் வேட்டையாடி விட்டது. அவரது மனைவி உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கூட்டாளிகளை போட்டுத் தள்ளி விட்டார்கள். வீட்டையும் புல்டோசர் வைத்து தரைமட்டமாக்கி விட்டார்கள். மொத்தத்தில் சினிமாவில் நடப்பதைப் போல் எல்லாமே முடிந்து போய் விட்டது.. ஆனால் துபேக்கள் பிறப்பதில்லை.. உருவாக்கப்படுகிறார்கள் என்பதை யாரும் மறக்க கூடாது.. நாளையே இன்னொரு துபே வெளி வருவார்.. அதுவரை அத்தகைய "நிழல் துபே"க்களின் கொட்டம் அடக்கப்படாது என்பதுதான் வேதனைக்குரியது.