ஒரே ஒரு வீடியோ... தாபா கடையில் மொய்த்த கூட்டம் - சொமோட்டா கொடுத்த இன்ப அதிர்ச்சி
ரோட்டோர தாபா கடையை சொமோட்டா நிறுவனம் தனது லிஸ்டில் இணைத்துள்ளது.
டெல்லி: வயதான தம்பதியர் நடத்தும் பாபா தாபா ரோட்டோர கடையை சொமோட்டா நிறுவனம் இணைத்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தாபா கடை நடத்தும் வயதான தம்பதியினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. யார் இந்த தம்பதியர் இவர்களின் சின்ன கடையை சொமோட்டா எப்படி தேர்வு செய்தது என்று அறிந்து கொள்ளும் முன்பு ஒரு சின்ன பிளாஸ்பேக் பார்க்கலாம்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவல் பலரது வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. லாக்டவுன் காரணமாக பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டு விட்டது. பொருளாதார நிலை படு சிக்கலாகி விட்டது. அன்றாக வாழ்க்கையை நடத்துவதற்கே கடும் சிக்கலாக இருக்கிறது.
இளையவர்களின் பாடு படு திண்டாட்டமாக இருக்கும் நிலையில் முதியவர்களின் வாழ்க்கை பெரும்பாடாக இருக்கிறது. அப்படித்தான் டெல்லியைச் சேர்ந்த கண்டா பிரசாத் என்ற முதியவர் வாழ்க்கையும் படு சிரமமாக இருந்தது. அவர் பேசிய ஒரே ஒரு வீடியோ வைரலானதில் இப்போது அவருடைய வாழ்க்கையே மாறி விட்டது.
கண்டா பிரசாத் தனது மனைவியுடன் 30 ஆண்டுகளாக மால்வியா நகரில் 'பாபா தாபா' என்ற சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட இந்த தம்பதி, குறைவான விலைக்கு உணவு விற்று தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
கொரோனா வைரஸ் அந்த முதிய தம்பதியரின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. லாக்டவுனால் கடை பல நாட்களாக மூடப்பட்டிருந்த போது வாழ்க்கை நடத்த படு திண்டாட்டமாக போய்விட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உணவகம் திறக்கப்பட்டும் விற்பனை நடக்கவில்லையாம்.
கடைக்கு ஒரு நபர் தற்செயலாக சாப்பிட வந்த போது, கண்டா பிரசாத் சோகமாக, தனது வேதனையை பகிர்ந்து கொண்டார். லாக்டவுனுக்கு பிறகு யாருமே சாப்பிட வரவில்லை கஷ்டமாக இருக்கிறது என்று கூறி கதறி அழ, அந்த நபர் அதனை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தார். அந்த வீடியோ முதியவரின் வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் முதியவரின் கடையைப் பற்றி அந்த வீடியோவை பார்த்த சினிமா பிரபலங்கள் பலர், பாபா தாபாவில் சாப்பிடும் படி தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டனர். அதே போல வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள், முதியவரின் கடையில் சாப்பிட குவிந்தனர். இப்போது அந்த தாபாவில் அமோக விற்பனை நடக்கிறதாம்.
இதையெல்லாம் விட இப்போது உணவு டெலிவரி நிறுவனமான சொமோட்டா நிறுவனம் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சொமோட்டாவில் பாபா தாபா கடை இணைக்கப்படுவதாகவும், இது போல சிறிய உணவகங்கள் இருந்தால் எங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள், எங்களால் இயன்ற உதவியை செய்வோம் என சொமேட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. சொமேட்டா கொடுத்த இந்த இன்ப அதிர்ச்சியால் முதிய தம்பதியர் திக்குமுக்காடி போயிருக்கின்றனர்.