கொதிக்கும் எண்ணெய்யில் அசால்ட்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே!
கொதிக்கும் எண்ணெய்யில் கையை விடும் பெண்ணின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
டெல்லி: கொதிக்கும் எண்ணெய்யில் கையை விட்டு பலகாரங்களை பொரித்தெடுக்கும் பெண்ணின் வீடியோ சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
ஒரு பெண் சமையல் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி அவர் என்ன சமைத்துவிட்டார் எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழும். விஷயம் அவர் என்ன சமைத்தார் என்பதல்ல... எப்படி சமைத்தார் என்பதே...
சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ள வீடியோவில் கொஞ்சம் வயது முதிர்ந்த பெண் ஒருவர் ஒரு எண்ணெய் சட்டிக்கு முன் நின்று கொண்டு எதையோ பொரித்துக்கொண்டிருக்கிறார். இதில் என்ன விசேஷம் என்றால், அந்த பெண் தன் கையையே கரண்டி போல் பயன்படுத்துவது தான்.
தண்ணீர் மாதிரி
கொதிக்கும் எண்ணெய்யில் அசால்டாக கையைவிட்டு பலகாரங்களை திருப்பி போடுகிறார். ஏதோ பச்சை தண்ணீரை எடுப்பது போல், வெறுங்கையாலேயே கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து பலகாரத்தின் மீது ஊற்றுகிறார் அந்த பெண்மணி. எண்ணெய் சட்டி அருகில் கையைக் கொண்டு சென்றாலே அதன் ஆவி கையைத் தாக்கும்.
She said tongs are for losers 😭😭😭 pic.twitter.com/QF4IaFiMd7
— First We Feast (@firstwefeast) October 26, 2020
வைரல் வீடியோ
ஆனால் அப்படி சூடு பட்டது மாதிரி எந்த சலனமும் இல்லாமல் சிரித்த முகத்துடன் அப்பெண்மணி பலகாரம் சுடுகிறார். அதோடு சூடான வெறும் பாத்திரத்தை தூக்குவதற்கே பலரும் அச்சப்படக்கூடிய சூழலில், கொதிக்கும் எண்ணெய்யில் கையைவிட்டு விளையாடும் இந்த பெண்ணின் செயல் பலரையும் ஆச்சரியக் கடலில் தத்தளிக்க வைத்திருக்கிறது. 13 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவை பல அயிரம் பேர் பார்த்துள்ளனர்.
எதிர்கேள்வி
அந்தப் பெண்மணியின் கையில் கெட்டியான மாவு ஒட்டி இருப்பதால் தான் அவரால் கொதிக்கும் எண்ணெய்யில் கையை விட முடிந்தது என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். ஆனால் சூடான எண்ணெய்யில் பட்டதும் அந்த மாவும் வெந்து, பின் கையைச் சூடு தாக்க வேண்டுமல்லவா என இதற்கு எதிர் கேள்வி கேட்கின்றனர் மற்றவர்கள்.
ஆர்வக்கோளாறுகள்
எது எப்படியோ எப்படி அந்தப் பெண்ணால் அப்படி கொதிக்கும் எண்ணெய்யில் வெறும் கையை விட முடிந்தது என்பது மட்டும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோவைப் பார்த்து ஆர்வக்கோளாறாக யாரும் நாமும் இதே மாதிரி செய்து பார்ப்போமே என கையை புண்ணாக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.