உங்களை போன்றே எங்கள் தொகுதியும் சிரிக்க வேண்டும்.. சபாநாயகருக்கு "அலேக் ஐஸ்" வைத்த ஆரணி எம்.பி.!
டெல்லி: நீங்கள் சிரித்த முகத்துடன் இருப்பது போல எங்கள் தொகுதி மக்களும் சிரிக்க வேண்டும், அதற்கு நீங்கள் ஆவன செய்ய வேண்டும் என மக்களவை சபாநாயகரிடம் ஆரணித் தொகுதி எம்.பி. விஸ்ணு பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கைத்தறிப் பட்டுச் சேலை உற்பத்திக்கும் தரமான அரிசி உற்பத்திக்கும் புகழ்பெற்ற நகரம். கைத்தறிப் பட்டுச் சேலை உற்பத்தி தொழில் அதைச் சார்ந்த தொழில்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கைத்தறிப் பட்டுச் சேலை உற்பத்தி தொழிலைச் சார்ந்த விவசாய தொழிலான பட்டு புழு வளர்த்தல், பட்டு கூட்டிலிருந்து பட்டு இழை பிரித்தெடுக்கும் ரீலிங் கம்பெனிகள், உள்ளிட்டவைகளும் இத் தொழிலை சார்ந்துள்ளன.
ஆரணி நெசவாளர்கள்
ஆரணியில் கைத்தறிப் பட்டுச் சேலை உற்பத்தி வெகு நேர்த்தியான நெசவை கொண்டிருக்கும், பட்டு சேலைகள் சிறப்பாக வடிவமைப்பது, பட்டு சேலைகளை மிக நீளமாக உற்பத்தி செய்வது, உலக அதிசயங்களை ஒரே சேலையில் வடிவமைப்பது, ஆகியவற்றிற்காக பலமுறை மத்திய மாநில அரசுகளின் விருதுகளை ஆரணி நெசவாளர்கள் பெற்றுள்ளனர்.
அறிவிப்பு
ஆரணி பகுதியில் கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2012 ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்திய-மாநில அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஆரணி பகுதியில் ஆய்வு செய்தனர். ஆனால் ஜவுளிப் பூங்கா வெறும் அறிவிப்போடு நின்று விட்டது.
சாயத் தொழிற்சாலைகள்
இந்நிலையில் ஆரணித் தொகுதியின் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள விஷ்ணுப் பிரசாத் இது குறித்து நேற்று மக்களவையில் பேசினார். அப்போது "எனது தொகுதியான ஆரணியில் விவசாயிகளும், நெசவாளிகளும், பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாயத் தொழிற்சாலைகள் மாசு காரணமாக மூடப்பட்டு வருகிறது.
தொகுதி மக்கள்
இதனால் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் வேறு வேலையை தேடி செல்கிறார்கள்". ஆரணி பட்டு காஞ்சிபுரத்திற்கு நிகராக புகழ் பெற்றது. ஆரணியில் பட்டுப் பூங்கா அமைக்க வேண்டுமென்பது தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.
விஷ்ணு பிரசாத்
அதற்கான இடமும் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு பட்டுப் பூங்காவை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று விஷ்ணு பிரசாத் கோரிக்கை விடுத்தார்.
ஓம் பிர்லா
தொடர்ந்து பேசிய அவர் ஆரணி தொகுதியில் மயிலம் என்ற இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தார்.
சிரிக்கும் சபாநாயகர்
இந்த கோரிக்கைகளை தொடர்ந்து பேசிய அவர் "சபாநாயகர் அவர்களே... உங்களைப் போலவே என் தொகுதி மக்களும் புன்னகை பூக்க வேண்டும். அதற்காக இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார். வழக்கமாகவே சிரிக்கும் சபாநாயகர் இதைக் கேட்டதும் இன்னும் அதிகமாக சிரித்தார்.