ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் நிறுவனங்களின் 25 கோடி வாடிக்கையாளர்கள் செல்போன் இணைப்பு விரைவில் 'கட்'
Recommended Video
டெல்லி: வோடஃபோன், ஐடியா, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் மாதம் ரூ.35க்கும் குறைவாக தங்களது நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் தொலைபேசி இணைப்பை துண்டிக்க உள்ளன. இதன் மூலமாக 25 கோடி 2G பயனாளர்கள் தங்கள் செல்போன் இணைப்பை பறிகொடுக்க உள்ளனர்.
மாதம் 35 ரூபாய்க்கு குறைவாக செல்போன் ரீசார்ஜ்சுக்காக செலவிடும் வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிப்பதற்கு இந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பராமரிப்பு செலவைவிட, வருவாய் குறைவாக இருப்பதே இதன் நோக்கம். தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த பிரிவின் கீழ் வருகிறார்கள்.
வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 150 மில்லியன் பேர் இந்தப் பிரிவின் கீழ் வருகிறார்கள். ஆக மொத்தம், 250 மில்லியன் அதாவது 25 கோடி வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் இணைப்பை பறிகொடுக்க உள்ளனர்.
வோடஃபோன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாலேஷ் சர்மா இதுகுறித்துக் கூறுகையில், மாதத்திற்கு 35 ரூபாய்க்கு கீழாக செல்போனுக்கு செலவிடுவோர் பெரும்பாலும் இன்கம்மிங் அழைப்புக்காக மட்டுமே செல்போன்களை பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.
குறைவாக செலவிடுவோர் இரட்டை சிம் கார்டு வசதி போன்ற செல்போன்களை வைத்துள்ளனர். ஒரு சிம் கார்டில் இருந்து அவுட்கோயிங் கால்களையும் மற்றொரு சிம் கார்டில் இருந்து இன்கம்மிங் கால்களையும் அவர்கள் பெறுகிறார்கள். இதனால்தான் சில சிம்கார்டு நிறுவனங்களுக்கு 35 ரூபாய்க்கும் குறைவாகவே செலவிடப்படுகிறது என்று தொலைதொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.