அசோக் கெலாட் அரசுக்கு எதிராக 6 எம்எல்ஏக்களும் ஓட்டுப் போட வேண்டும்- பகுஜன் சமாஜ் அதிரடி விப் உத்தரவு
டெல்லி: ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசை எதிர்த்து ஓட்டு போட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது, காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்எல்ஏக்கள் பிறகு காங்கிரசுடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதுபோன்ற செயல், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் உறுப்பினர்களின் பதவியைப் பறிக்கத் தக்கது என்று பாஜக சார்பில் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரிடம் போராடியாச்சு.. பலனில்லை.. அடுத்து மோடி வீட்டுக்கு முன்பு தர்ணா.. அசோக் கெலாட் அதிரடி
தேர்தல் ஆணையம்
இந்த நிலையில், 6 எம்எல்ஏக்களும் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக தான் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த ராஜ்ய சபை தேர்தலின் போது, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி இருந்தார். ஆனால் சபாநாயகரின் இறுதி முடிவில் தங்களால் தலையிட முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அசோக் கெலாட் அரசு
தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி முற்றி உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அந்த அரசுக்கு எதிராகத்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் ஓட்டு போட வேண்டும் என்று அக்கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விப் நோட்டீஸ்
6 எம்எல்ஏக்களுக்கும் தனித்தனியாக இதுபற்றிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் என்பது, தேசிய கட்சி என்பதால் மாநில அளவில் இணைப்புகள் நடத்திக் கொள்வது செல்லாது. தேசிய அளவில் மட்டும்தான் அது செல்லத்தக்கது. இதை மீறினால் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள், என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா தெரிவித்தார்.
காங்கிரசுக்கு எதிராக மாயாவதி
"பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆளும் தரப்பு பேசிய, தொலைபேசி உரையாடல்களை வைத்துப் பார்க்கும்போது, சட்டவிரோதமாக அரசியல் சாசனத்துக்கு எதிராக கெலாட் செயல்படுவது உறுதியாகியுள்ளது. எனவே ராஜஸ்தானில் நிலவக்கூடிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையை அம்மாநில ஆளுநர் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்", என்று, மாயாவதி சில தினங்கள் முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.