பாஜகவிற்கு ரெட் சிக்னல் கொடுக்கும் ராஜஸ்தான், ம.பி.. அமித் ஷாவை அதிர வைக்கும் புள்ளி விவரம்!
இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட லோக்சபா தேர்தலில் பதிவாகி உள்ள வாக்குப்பதிவு சதவிகிதம் பாஜக கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
டெல்லி: இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட லோக்சபா தேர்தலில் பதிவாகி உள்ள வாக்குப்பதிவு சதவிகிதம் பாஜக கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பதிவான வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்கள் பாஜகவை கலக்கத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
லோக்சபா தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடக்க உள்ளது. ஆனால் இதுவரை நடந்த வாக்குப்பதிவு தொடர்பாக வெளியாகி இருக்கும் புள்ளிவிவரங்கள் பாஜகவிற்கு ''ரெட் அலெர்ட்'' கொடுத்து உள்ளது.
இது மாநில கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை உற்சாகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால்தான் இப்போதே, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து இந்த கட்சிகள் எல்லாம் ஆலோசிக்க தொடங்கிவிட்டது.
இரண்டு மாநிலத்திலும் அதிகம்
இதுவரை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஐந்து கட்ட லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 2014 லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. 2014ல் முதல் ஐந்து கட்டங்களில் பதிவான வாக்குகளை விட இரண்டு மாநிலத்திலும் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. இது கண்டிப்பாக ஆளும் பாஜக கட்சிக்கு நல்ல சகுனம் கிடையாது.
எத்தனை தொகுதிகள்
ராஜஸ்தானில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளது. மத்திய பிரதேசத்தில் அதேபோல் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளது. இதனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் வெற்றிபெறுவது, லோக்சபாவில் பெரும்பான்மை பெறுவதற்கு பெரிய உதவியாக இருக்கும். ஆனால் இந்த முறை, இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் பக்கம் காற்று வீசுகிறது.
மத்திய பிரதேசம் ஒப்பீடு
உதாரணமாக மத்திய பிரதேசத்தில் பதிவான வாக்குகள் விவரம்:
- 2013 மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தல்: 72.6% வாக்குகள் பதிவானது.
- 2014 மத்திய பிரதேச லோக்சபா தேர்தல்: 61.6% வாக்குகள் பதிவானது.
- 2018 மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: 75.6% வாக்குகள் பதிவானது.
ராஜஸ்தான் ஒப்பீடு
அதேபோல் ராஜஸ்தானில் பதிவான வாக்குகள் விவரம்:
- 2013 ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 75.6% வாக்குகள் பதிவானது.
- 2014 ராஜஸ்தான் லோக்சபா தேர்தல்: 63.1% வாக்குகள் பதிவானது.
- 2018 ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 74.8% வாக்குகள் பதிவானது.
அதிகம் ஆனால் என்ன நடக்கிறது
இந்த இரண்டு மாநிலங்களிலும் இதுவரை பதிவாகி உள்ள வாக்குப்பதிவு சதவிகிதம்தான் தற்போது காங்கிரஸ் கட்சிக்கும் இதர எதிர்க்கட்சிகளுக்கும் நிம்மதி அளித்துள்ளது. எப்போதெல்லாம் இங்கு வாக்குகள் அதிகமாக விழுகிறதோ, அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கி இரண்டு மாநிலங்களிலும் அதிகம் ஆகியுள்ளது. வாக்கு சதவிகிதம் குறையும் போது காங்கிரஸ் தனது வாக்கு சதவிகிதத்தை பெரிய அளவில் இழக்கிறது.
இப்போதும் அதிகம் ஆகிறது
அதாவது வாக்கு சதவிகிதம் குறையும் போது காங்கிரஸ் கட்சிக்கு விழ வேண்டிய வாக்குகள் குறைகிறது. வாக்கு சதவிகிதம் கூடும் போது காங்கிரஸ் வாக்குகள் கூடுகிறது. இதனால்தான் தற்போது பாஜக கவலையில் இருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த 5 கட்ட லோக்சபா தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் இரண்டிலும் மிக மிக அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகி உள்ளது. இது காங்கிரஸ் வாக்காளர்கள் மீண்டும் வந்ததை உணர்த்துகிறது.
இந்த முறை கூடுமா?
அதனால் இந்தமுறையும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாக்குசதவிகிதத்தை பார்த்துவிட்டுத்தான் எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய இப்போதே மும்முரம் காட்டுவதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் என்ன மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்த போகிறதோ..!