அமைதியாக முடிந்தது ஜார்கண்ட் இறுதிகட்ட சட்டசபை தேர்தல்.. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை
டெல்லி: ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கான 5வது மற்றும் இறுதி கட்ட தேர்தல், 16 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது. 23ம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளியாக உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில், தற்போது, பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில்தான், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. முதல்கட்டத் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது.

4ம் கட்ட தேர்தல், கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில் 5வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. 5 தொகுதிகளில் மதியம் 3 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மற்ற 11 தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்பட முக்கிய வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களத்தில் இருந்தனர். ஹேமந்த் சோரன் தும்கா மற்றும் பர்கைட் உள்ளிட்ட இரண்டு தொகுதியில் போட்டியிட்டு உள்ளார்.

இவரை எதிர்த்து பாஜகவின் சிமோன் மால்டோ போட்டியிட்டுள்ளார். இறுதி கட்ட தேர்தல் 1347 வாக்குபதிவு மையங்களில் அமைதியாக நடந்து முடிந்தது. 7006 விவிபாட் மெசின்கள் பயன்படுத்தப்பட்டன. மாலை 4 மணியளவில், பதிவான வாக்குப்பதிவு படி, 63.98 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது.
81 தொகுதிகள் உள்ள ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இன்றுடன் தேர்தல் முடிவடைந்த பின்னர் வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.