விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல்: இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தல்
டெல்லி: அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் இன்று இரவே துபாயிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார்.
2007ம் ஆண்டு, மன்மோன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, குடியரசு தலைவர், பிரதமர் மற்ற விவிஐபிகளுக்கு ரூ.3600 கோடி செலவில் 12, அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட், சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டவர் கிறிஸ்டியன் மைக்கேல்.
கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக, அமலாக்கத்துறையால், 2016ம் ஆண்டு ஜூன் மாதம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து கிறிஸ்டியன் மைக்கேல் 30 மில்லியன் யூரோஸ் லஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்தியாவிலுள்ள பலருக்கும், ஹெலிகாப்டர் நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கின. முறைகேடுகள் புகாரால், ஒப்பந்தம் போடப்பட்ட 6 வருடங்களுக்கு பிறகு, அதை மத்திய அரசு ரத்து செய்தது.
2016ல் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகி லஞ்சம் பெற்ற புகாருக்காக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் டீல் இடைத்தரகர்களில் ஒருவரான கிறிஸ்டியன் மைக்கேல் துபாயிலிருந்து இன்று இரவு இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுகிறார். இதை எதிர்த்து கிறிஸ்டியன் மைக்கேல் துபாய் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.