இந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி
டெல்லி: இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன் என்று, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் இன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது திட்டவட்டமாக தெரிவித்தார்.
மோடி தலைமையில், பாஜக கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்ற பிறகு, முதல் லோக்சபா கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் ஆரம்பத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு அவைகளை முன்னிறுத்தி, உரை நிகழ்த்தினார்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல கட்சி உறுப்பினர்களும் உரையாற்றினர். இன்று மாலை, பிரதமர் நரேந்திர மோடி, நன்றி தெரிவிப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து உரையாற்றினார்.
அப்போது, மோடி கூறியதாவது: ஜனாதிபதி தனது உரையில் புதிய இந்தியாவின் பார்வையை எடுத்துரைத்தார். வெற்றி மற்றும் தோல்வியின் அடிப்படையில் நான் ஒருபோதும் தேர்தலை பற்றி சிந்திப்பதில்லை. 130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்வதற்கும், நமது குடிமக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், பணியாற்றுவதற்கான வாய்ப்பு, இந்த தேர்தல், என்பதே சிறப்பு.
தங்களை விட, இந்திய மக்கள், தமது தேசத்தின் நன்மை பற்றி சிந்திக்கிறார்கள் என்பதை 2019 மக்களவைத் தேர்தல்கள் எடுத்துக்காட்டுகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின், செயல்திறனை நாட்டு மக்கள் 1 நிமிடம் ஆராய்ந்து பார்த்து, எங்களை மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களித்தனர். எங்கள் பணிக்கு மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
யாரும் இல்லாத மக்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது என்பதை கடந்த 5 ஆண்டுகளில் நான் உணர்ந்தேன். இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். வலுவான, பாதுகாப்பான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம். நமது வழியில் வரும் அனைத்து சவால்களையும் நாம் சமாளிக்க முடியும்.
நீண்ட காலத்திற்குப் பிறகு, தேசம் ஒரு வலுவான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆட்சியாளர்கள் பற்றிய மக்களின் இந்த விழிப்புணர்வு பாராட்டத்தக்கது. இந்தியா முன்னேறுவதற்கான பாதையில், எந்த வாய்ப்பையும் இழக்கக்கூடாது.
கடந்த 70 ஆண்டுகளாக நீடிக்கும் விஷயங்களை மாற்ற காலம் தேவை, என்பதை நான் அறிவேன். எங்கள் முக்கிய குறிக்கோளிலிருந்து நாங்கள் திசை திரும்பவோ அல்லது நீர்த்துப்போகவோ இல்லை. உள்கட்டமைப்போ அல்லது விண்வெளி துறையோ, எதுவாக இருந்தாலும் நாம் முன்னேற வேண்டும். நாட்டின் வறுமை ஒழிப்பு மற்றும் நவீனமயமாக்கல் இரண்டுமே ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே எனது கொள்கை.