நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரே தீர்ப்பாயம்.. மக்களவையில் மசோதா நிறைவேறியது!
நாடு முழுவதும் உள்ள நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் பல மாநிலங்களுக்கு இடையில் நதி நீர் பிரச்சனை நிலவி வருகிறது. சரியான அளவில் நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில் மாநிலங்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதை தீர்க்க பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதேபோல் இந்த பிரச்சனைகளை தீர்க்க பல மாநிலங்களுக்கு இடையில் நதிநீர் தீர்ப்பாயமும் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகா இடையில் நிலவி வரும் காவிரி நதி நீர் பிரச்சனையை தீர்க்க, ஏற்கனவே காவிரி நதி நீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் தற்போது செயல்பட்டு தமிழகத்திற்கு தேவையான நதி நீரை பெற்று தருகிறது. இந்த நிலையில்தான் தற்போது நாடு முழுவதும் உள்ள நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அது எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், காவிரி ஆணையத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது.காவிரி ஆணையம் எப்போதும் போல செயல்படும் என்று பாஜக சார்பாக நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
இந்த ஒரே தீர்ப்பாய மசோதாவை திமுக மக்களவையில் எதிர்த்தது. அதேபோல் அதிமுக இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் கூறியது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறி உள்ளதால், விரைவில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.