பழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை
டெல்லி: மழை நீரை சேமிக்கும், பழைய வழிகளை விட, முன்னேறி ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்றும், இன்றும் மக்களவை எம்.பி.க்கள் பேசி வருகின்றனர். இன்று மாலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 130 கோடி மக்களுக்கு சேவை செய்யும் சிறப்பான வாய்ப்பு தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. ஏழைகளும் பெண்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் வழங்குவது என்பது எங்களது மந்திரமாகும்.
கிடைக்கும் மழை நீரை சேமிக்கும், பழைய வழிகளை விட, முன்னேறி ஒவ்வொரு துளியையும் சேமிக்க வேண்டும். அதற்காக, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையுடன், விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், முன்னேற வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் பேசினார்.
சர்தார் சரோவர் அணை சர்தார் படேலின் சிந்தனையாக இருந்தது. ஆனால், இந்த அணையின் பணிகள் தொடர்ந்து தாமதமாகின. குஜராத் முதல்வராக, இந்த திட்டத்திற்காக நான் உண்ணாவிரதத்தில் அமர வேண்டியிருந்தது என்றும் மக்களவையில் மோடி கூறினார். என்டிஏ ஆட்சிக்கு வந்த பிறகு, வேலை வேகம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த அணை பலருக்கும் பயனளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இன்று, நீர்வளங்களைப் பற்றி பேசும் போது, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நான் நினைத்து பார்க்கிறேன். நீர்வழிகள் மற்றும் நீர்ப்பாசனங்களில் ஆர்வத்துடன் பணியாற்றியவர் அவர்தான். விவசாயிகளுக்காக ஒன்றுபடுவோம் என்றும் கூறினார். அதே நேரம், கடந்த 70 ஆண்டுகளாக இருந்துவரும் நடைமுறைகளை எல்லாம் மாற்றுவதற்கான காலம் இது என்பதும் எனக்கு தெரியும் என்றார்.