அணைகளிலுள்ள நீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துங்கள்.. தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு அறிவுரை
டெல்லி: கோடை வெயில் நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் உள்ள அணைகளில் நீர் இருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் வறட்சியை சமாளிக்க தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக மத்திய நீர் ஆணைய உறுப்பினர் எஸ்.கே.ஹல்தார் 6 மாநிலங்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கை தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதில் வறட்சி குறித்த எச்சரிக்கையும், அதனை சமாளிப்பதற்கான ஆலோசனைகளும் கூறப்பட்டுள்ளது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும்படியும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட மாநிலங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், நீரை சாதுர்யமாக பயன்படுத்த வேண்டும். ஆறு மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளில் 22% உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அணைகளிலிருந்த சராசரி நீர் இருப்பை விட தற்போது 20% இது குறைவாகும்.
எனவே மீண்டும் அணைகளில் நீர்மட்டம் கணிசமான அளவு அதிகரிக்கும் வரை, தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துங்கள் என கூறப்பட்டுள்ளது.
அண்மையில் மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி நாட்டிலுள்ள முக்கிய அணைகளில் ஒட்டுமொத்தமாக 35.99 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு நீர் தற்போது உள்ளது. முக்கிய அணைகளின் ஒட்டுமொத்த கொள்திறன் 161.993 பில்லியன் கியூபிக் மீட்டர். குஜராத்தில் 10 அணைகளும், மராட்டியத்தில் 17 அணைகள், தமிழகத்தில் 6 அணைகள், ஆந்திராவில் 1 அணை உள்ளன
தெலங்கானாவில் 2 அணைகளும், கேரளாவில் 6 அணைகளும், கர்நாடகத்தில் 14 அணைகளும் உள்ளன. நாடு முழுவதுமுள்ள 91 மிகப்பெரிய அணைகளின் நீர்மட்டத்தை மத்திய நீர்வள ஆணையம் கண்காணித்து வருகிறது.
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க சென்னை மக்கள் ஷவர்களில் குளிப்பதைத் தவிர்க்க சென்னை குடிநீர் வாரியமும் அறிவுறுத்தியுள்ளது. வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் அதிக நீர் வீணடிப்பதை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.