நாறும் யமுனை.. "கழுவி விடும்" உ.பி. அரசு.... ஆத்தோரமா மல்லிகை தோரணம் வேற.. டிரம்ப் வருகையால் பிஸி!
தாஜ்மஹாலுக்கு டிரம்ப் வருவதால் அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது
ஆ்க்ரா: இந்த விஐபி தலைவர்கள் வரும்போது நடக்கும் கூத்துக்கள் இருக்கு பாருங்க.. தலையில் அடிச்சிக்கலாம் போலவே இருக்கும். அப்படி ஒரு கூத்து இப்போது ஆக்ராவில் நடந்துள்ளது.
Recommended Video
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று இந்தியா வந்துள்ளார்.. 2 நாட்கள் இந்தியாவில் அவர் இருப்பார். மொத்தமே 36 மணி நேரம்தான் இருக்கப் போகிறார். இந்த 36 மணி நேரத்திற்காக கோடிகளைக் கொட்டிக் கொண்டுள்ளனர் பல்வேறு ஏற்பாடுகளுக்காக.
இந்த சுற்றுப் பயணத்தின்போது பெரிதாக எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக போவதில்லை. எப்படி சீன அதிபர் வந்து போனாரோ அதுபோல ஒரு டிரிப் போல வந்து போகவுள்ளார் டிரம்ப். இதற்காக அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது எல்லாமே.
தாஜ்மஹால்
இன்று ஆக்ரா சென்றுள்ளார்... அங்குள்ள மிகப் புகழ் பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றான காதல் சின்னம் தாஜ் மஹாலைப் பார்வையிடுகிறார்.. அவரது மனைவியுடன் தாஜ்மஹாலுக்கு வந்துள்ளார் டிரம்ப்... இதற்காக ஏகப்பட்ட ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டன. அதில் ஒன்றுதான். யமுனை ஆற்றை கழுவி விடுவது.. உண்மையில் ஆற்றைக் கழுவி விடும் வகையில்தான் சில வேலைகளைச் செய்துள்ளது உபி. அரசு.
அபராதம்
யமுனை நதியோரத்தில்தான் தாஜ்மஹால் உள்ளது. யமுனை ஆறு மாசுபட்டுப் போயுள்ளது. ஏகப்பட்ட கழிவுகள், மாசு கலந்து ஆறே நாறிப் போய் விட்டது. சில வருடங்களுக்கு முன்பு கூட ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்திய கூட்டத்தால் ஆறு பெரும் மாசடைந்ததாக அபராதம் எல்லாம் விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். இப்படிப்பட்ட நதிக்கரையோரமாக இருக்கும் தாஜ்மஹாலும் கூட இந்த மாசு குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் டிரம்ப் வருகை தரவுள்ளதால் அவர் வரும்போது ஆற்றிலிருந்து துர் நாற்றம் வந்து விடாமல் தடுக்க ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டனராம்... அதாவது உத்தரப் பிரதேச நீர்ப்பாசனத்துறை உத்தரவின்படி விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விட்டுள்ளனர். புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள கங்கநாகரிலிருந்து இந்த தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று வரை தண்ணீர் திறந்து விடப்படும்.
மல்லிகை பூக்கள்
டிரம்ப் வருகையின்போது ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தால் தேக்கமடைந்து நிற்கும் தண்ணீர் வெளியேறி துர்நாற்றம் அடிக்காது என்ற நம்பிக்கையில் இப்படி தண்ணீர் திறந்து விட்டுள்ளனராம். டிரம்ப் போகும் வரை ஆற்றில் குறிப்பிட்ட அளவில் தண்ணீர் ஓட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனராம். தண்ணீர் தேங்கினால்தான் சிக்கல் என்பதால் இந்த ஏற்பாடாம். அதுமட்டுமல்ல.. ஆற்றங்கரையில் இருந்து அசுத்த காற்று வருவதை தவிர்க்க மல்லிகை பூக்கள் தோரணங்களும் செய்யப்பட்டுள்ளன.
ஏற்பாடுகள்
நடந்து முடிந்த ஏற்பாடுகள் குறித்து உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு உதவி பொறியாளர் அரவிந்த் குமார் கூறுகையில், குறிப்பிட்ட அளவிலான தண்ணீர் ஆற்றில் இருந்தால் ஆக்சிஜன் அளவு அதிகரித்து, துர்நாற்றம் குறையும். அதேசமயம், இப்படி தண்ணீர் திறந்து விடுவதால் யமுனை ஆற்று நீரை குடிக்க முடியாது. துர்நாற்றத்தை மட்டுமே குறைக்க இது உதவும் என்றார். அதாவது டிரம்ப்புக்காக மட்டுமே திறந்து விடுகிறோம்.. வேறு யாரும் பம்ப்பு போட்டு தண்ணீர் எடுத்து குடித்து விடாதீர்கள் என்று சொல்லாமல் சொல்லியுள்ளது உ.பி. அரசு.
இந்தப் பக்கம் ஆற்றைக் கழுவுகிறார்கள்.. குஜராத்திலோ குடிசைகளை மறைக்க சுவர் கட்டுகிறார்கள்.. "இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே" என்ற சிங்காரவேலன் பாட்டுதான் நமக்கு ஞாபகம் இருந்து இந்த நேரம் பார்த்து!