மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
டெல்லி: மக்களவைக்கான காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மேலும், அக்கட்சிக்கு வெறும் 52 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனால், எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இழந்தது.
மொத்த மக்களவை தொகுதிகளில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியும். அதற்கு 55 இடங்கள் தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு 3 எம்.பி.,க்கள் தேவைப்படுகின்றனர்.
சிங்கப்பூர் செல்லும் அவசரத்தில் ஸ்டாலின் இப்படி செய்யலாமா? அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
தேசியவாத காங்கிரஸ் கட்சியை இணைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதற்கான ரகசிய திட்டத்தையும் காங்கிரஸ் கையில் எடுத்தது. ஆனால், அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. எனவே, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற இயலாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று மக்களவைக்கான காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான உயர்மட்ட கூட்டம் டெல்லியில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மக்களவைக்கான காங்கிரஸ் தலைவர் பதவிக்காக கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுரேஷ், காங்கிரஸ் செய்திதொடர்பாளர் மணீஷ் திவாரி, சசி தரூர் மற்றும் ஆதிர் சவுத்ரி ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இறுதியில், மேற்குவங்க மாநிலம் பெர்ஹாம்பூர் தொகுதி எம்.பி.,யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவைக்கான காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1999ம் ஆண்டு முதல் இந்த தொகுதியிலிருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.