ரவுடி விகாஸ் துபே ஜாமீன் பெற்றது அதிர்ச்சி அளிக்கிறது.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
டெல்லி: பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் ரவுடி விகாஸ் துபே ஜாமீன் பெற்று வெளியே இருந்தது அதிர்ச்சி அளிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார். விகாஸ் துபே போன்றவா்கள் வெளியே நடமாடியது, நீதித் துறையின் தோல்வி என்றும் வேதனை தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் மாவட்டத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபேவைக் கைது செய்யச் சென்ற போலீசார் மீது அவரது கூட்டாளிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீஸ்காரர்கள் கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தனர்.
இதையடுத்து, விகாஸ் துபேவையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க கான்பூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனா். கடந்த 10-ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனில் விகாஸ் துபே பிடிப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து கான்பூருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது தப்ப முயன்றதால் விகாஸ் துபே எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த எண்கவுண்டர் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
கோவாக்சின் மருந்து மனிதர்களுக்கு சோதனை.. உங்களுக்கு விருப்பமா.. டெல்லி எய்ம்ஸ் முக்கிய அறிவிப்பு
கண்காணிப்பு ஆணையம்
இந்நிலையில், விகாஸ் துபேவும் அவரது கூட்டாளிகளும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநில ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை உத்தரப்பிரதேச அரசு அமைத்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேச அரசே விசாரணை ஆணையம் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும். உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
உபி அரசு பதில் மனு
இந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமா்வு நேற்று விசாரித்தது. அப்போது, விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சஷிகாந்த் அகா்வால் தலைமையில் ஒரு நபா் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிதுறையின் தோல்வி
அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே , "பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள போதிலும், விகாஸ் துபே சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருந்திருக்கிறார். அவருக்கு ஜாமீன் கிடைத்தது அதிர்ச்சியாக இருக்கிறது. சிறை கம்பிகளுக்கு பின்னால் இருக்க வேண்டிய விகாஸ் துபே போன்றவா்கள் வெளியே நடமாடியது, நீதித் துறையின் தோல்வியாகும். உத்தர பிரதேச அரசு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
Recommended Video
ஓய்வு பெற்ற நீதிபதி
விகாஸ் துபேவும் அவரது கூட்டாளிகளும் எண்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றத்தில் பணியில் இருக்கும் ஒரு நீதிபதியை நியமிக்க முடியாது. உத்தர பிரதேச அரசு நியமித்துள்ள ஒரு நபா் விசாரணைக் குழுவில் சில மாற்றங்களை செய்ய பரிந்துரை செய்கிறோம். அதாவது, அந்த விசாரணைக் குழுவில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரையும், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவரையும் நியமிக்க . வரும் 22-ஆம் தேதிக்குள் உத்தர பிரதேச அரசு இதற்க பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.