லடாக்கில் பாலம்..ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி...சீனா சொந்தம் கொண்டாடுவதை ஏற்கமாட்டோம் - அரிந்தம் பக்சி
கிழக்கு லடாக்கில் சீனா பாலம் கட்டி வரும் இடம், 1960களில் இருந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
டெல்லி: சீனா நியாயமின்றி சொந்தம் கொண்டாடுவதையும், கட்டுமான பணிகளையும் ஏற்றுக்கொள்வது இல்லை. உன்னிப்பாக கண்காணிக்கிறோம் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார்.
Recommended Video
இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளும் தலா 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்து வைத்துள்ளது. அதேவேளை எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இருநாடுகளும் இதுவரை 15 கட்ட ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஆனால், அந்த பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இதற்கிடையில், 1962 ஆம் ஆண்டு நடந்த போரில் இந்தியாவின் கிழக்கு லடாக்கின் பாங்காங் டிசோ ஏரி பகுதியில் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியது. இந்த பகுதியை சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக இந்தியா கருதுகிறது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின் பாங்காங் டிசோ ஏரி உள்பட இந்தியாவின் எல்லையோர பகுதியில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகிறது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய பாங்காங் டிசோ ஏரி பகுதியில் சீனா கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பாலம் ஒன்றை அமைத்தது. இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிா்ப்பு தொிவிக்கப்பட்டது. இந்த பாலம் மூலம் போர் தளவாடங்கள், வீரர்களை சீனா எளிதில் எல்லைப்பகுதிக்கு கொண்டு வர முடியும்.
இந்த நிலையில், லடாக் கிழக்குப் பகுதியில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவம் இரண்டாவது பாலத்தை கட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியா சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து 20 கிலோமீட்டா் தொலைவில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து புவியியல் நுண்ணறிவு ஆராய்ச்சியாளா் டாமியன் சைமன் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், அசல் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் ராணுவ தளவாடங்களை எளிதாக எடுத்து செல்வதற்காக மிகப்பொிய பாலம் ஒன்றை சீனா கட்டி வருகிறது. இதனை செயற்கைக்கோள் புகைப்படம் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாலத்தின் இரண்டு புறமும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து எதிர்கட்சியினர் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி பாங்காங் ஏரி பகுதியில் முந்தைய பாலத்துக்கு அருகே மற்றொரு பாலத்தை சீனா கட்டி வருவதாக வெளியான தகவலை பார்த்தோம். அந்த 2 பாலங்களும் கடந்த 1960-களில் இருந்து தொடர்ந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் அமைந்துள்ளன. ஆனால், நமது பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதை நாம் ஏற்றுக்கொள்வது இல்லை.
சீனா நியாயமின்றி சொந்தம் கொண்டாடுவதையும், கட்டுமான பணிகளையும் ஏற்றுக்கொள்வது இல்லை. உன்னிப்பாக கண்காணிக்கிறோம் காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா பலதடவை சொல்லி இருக்கிறது. நமது இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதிக்க வேண்டும்.
தேச பாதுகாப்பு நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, 2014ஆம் ஆண்டில் இருந்து எல்லை அருகே சாலைகள், பாலங்கள் ஆகிய கட்டுமானங்களை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இவை பாதுகாப்பு தேவைக்கு மட்டுமின்றி, அந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கின்றன.
தேச பாதுகாப்பு தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் மத்திய அரசு உன்னிப்பாக கண்காணிக்கிறது. இறையாண்மையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.
சீனா பாலம் கட்டுவது ஒவ்வொருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய தீவிர பிரச்சினை. பிரதமர் தனது சொந்த கவுரவத்தை மறந்து விட்டு, நாட்டை பற்றியும், எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா வலியுறுத்தியுள்ளார். சீன ஆக்கிரப்பில் உள்ள பகுதி' என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறிய வார்த்தைகள் பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.