எங்களை நிறுத்தியதாலேயே தடுப்புகளை உடைத்தோம்.. கலவரத்தின் பின்னணியில் பாஜக.. விவசாய தலைவர் தகவல்
டெல்லி: ஏற்கனவே திட்டமிட்டதைப் போல டிராக்டர் பேரணியைத் தொடங்க போலீஸ் அனுமதிக்காததாலேயே தடுப்புகளை உடைத்ததாக விவசாயச் சங்கத் தலைவர் சத்னம் சிங் பன்னு தெரிவித்தார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர் உட்பட பல காரணங்களால் இந்தப் போராட்டத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல்வேறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. இருப்பினும், இதுவரை இருதரப்பிற்கும் இடையே இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
டிராக்டர் பேரணி
இந்நிலையில், விவசாய சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர். இதில் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் வன்முறை ஏற்பட்டது. மேலும், செங்கோட்டையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவான கொடியும் செங்கோட்டையில ஏற்பட்டது. இந்தக் குழப்பத்தில் 80க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.
போலீசார் குற்றச்சாட்டு
நேற்று காலை குடியரசு தின விழா அணிவகுப்பிற்குப் பிறகு, 12 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது. ஆனால், திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாக விவசாயிகள் தங்கள் பேரணியைத் தொடங்கியதாக டெல்லி காவல் துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், விவசாயிகள் ஒப்புக்கொண்ட வழிக்குப் பதிலாகக் கடைசி நேரத்தில் வேறு சாலைகளில் பேரணி நடத்தியதாகவும் போலீஸார் குற்றஞ்சாட்டினர்.
தடுப்புகளை உடைத்தது ஏன்
இது குறித்து நேற்று காலை காவல் துறை தடுப்புகளை முதலில் உடைத்த விவசாயச் சங்க தலைவர்களில் ஒருவரான சத்னம் சிங் கூறுகையில், "நாங்கள் அனுமதி அளிக்கப்பட்ட வழியிலேயே போராட்டம் நடத்தினோம். போலீசார் எங்களைப் பேரணியை நடத்த விடாமல் தடுத்தார்கள். இதனாலேயே வேறுவழியின்றி தடுப்புகளை நாங்கள் உடைத்தோம். பேரணியின் போதும், நாங்கள் அமைதியாகவே பேரணி நடத்த விரும்புவதாக காவல்துறையிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.
நடிகர் தீப் சிங்
செங்கோட்டையில் நடைபெற்ற கலவரத்திற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அப்போது விவசாயிகள் யாரும் அங்கு இல்லை. பஞ்சாபி நடிகர் தீப் சிங்கே அந்த கலவரத்திற்கு முக்கிய காரணம். அவரது தூண்டுதலாலேயே அங்கு வேறு ஒரு கொடி ஏற்றப்பட்டது. எங்களை தடுத்த நிறுத்திய போலீசார் அவரை ஏன் தடுக்கவில்லை. ஏன்னெறால் அவர் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்" என்றார்.