நாட்டில் இன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்
டெல்லி: நாட்டில் இன்னொரு 1984 கலவரத்தை அனுமதிக்க முடியாது என்று டெல்லி வன்முறைகளை விசாரித்த உயர்நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.
டெல்லி வன்முறைகள் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் விசாரித்தார். இந்த விசாரணையின் போது நீதிபதி முரளிதரன் கூறியதாவது:
டெல்லி மக்களுக்கு இசட் பிரிவைப் போன்ற பாதுகாப்பு வழங்க வேன்டும். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
டெல்லி மக்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி உதவ வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய முகாம்களை அமைக்க வேண்டும். அப்பகுதி மக்களின் உதவிக்காக அவசர 24 மணிநேர உதவி எண் வசதியை ஏற்படுத்துவது குறித்து ஆராய வேண்டும்.
நாட்டில் 1984-ம் ஆண்டு போல இன்னொரு கலவரத்தை அனுமதிக்க முடியாது. டெல்லி வன்முறைகளில் ஐபி அதிகாரி உயிரிழந்திருப்பது துரதிருஷ்டவசமானது. மத்திய மாநில அரசு அதிகாரிகள், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். இவ்வாறு நீதிபதி முரளிதரன் கூறினார்.