அமித்ஷாவிடம் அரசியல் பேசவில்லை...மோடியிடம் பேசியதை அவரிடம் சொன்னோம் - சொல்வது எடப்பாடி பழனிச்சாமி
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று தமிழக சட்டசபை எதிர்கட்சித்தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
சசிகலா மீண்டும் அதிமுகவைக் கைப்பற்றப் போவதாக பேசி வருவது சர்ச்சையை உருவாக்கி வருகிறது. இந்த பரபரப்பான அரசியலில் சூழ்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோரின் டெல்லி பயணம் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
11-வது உலகத் தமிழ் மாநாடு: கருணாநிதி கனவை நிறைவேற்றுமா தி.மு.க. அரசு?மத்திய பா.ஜ.க. அரசும் தீவிரம்!
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை நேற்று மாலை ஒபிஎஸ், இபிஎஸ் சந்தித்து பேசினர். அவர்களுடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தளவாய் சுந்தரம், தம்பிதுரை உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், நடப்பு அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதித்தனர்.
டெல்லியில் மோடியுடன் சந்திப்பு
அப்போது பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குமாறு வலியுறுத்தினோம். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்றும் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்றும் தெரிவித்தோம்.
கோதாவரி காவிரி இணைப்பு
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். கோதாவரி காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அமித்ஷாவை சந்தித்த தலைவர்கள்
சசிகலா பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி, அனைவருக்கும் நன்றி என்று கூறிவிட்டு சென்றார். பிரதமர் உடனான சந்திப்புக்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உள்ளிட்ட தலைவர்கள் இன்று சந்தித்து பேசினர்.
சொன்னதைத் சொன்னோம்
அமித்ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. அரசியல் ரீதியாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை என்று கூறினார். தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசியதை அமித்ஷாவிடம் சொன்னதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.