உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவின் மீது நம்பிக்கையில்லை...போராட்டம் தொடரும் - விவசாயிகள் திட்டவட்டம்
உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளனர்.போராட்டத்தை முன் கூட்டியே முடிக்கும் திட்டம் இல்லை என்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும்
டெல்லி: கடும் குளிரும் பனியும் ஒருபக்கம் வாட்ட, மழை வெள்ளம் சூழ்ந்த நிலையிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 48 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் நால்வர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ள நிலையில் அந்த குழுவின் நம்பிக்கையில்லை என்று விவசாயிகள் நிராகரித்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளதாக கூறும் விவசாயிகள், போராட்டத்தை முன் கூட்டியே முடிக்கும் திட்டம் இல்லை என்றும் போராட்டம் தொடரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லியும், நான்கு மாநில எல்லைகளிலும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் சட்டத்தில் திருத்தம் வேண்டுமானால் கொண்டுவரலாம் ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வாய்ப்பே இல்லை என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது.
48 நாட்களாக நீடிக்கும் போராட்டம்
கடும் பனியிலும், மழையிலும் 48 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ள விவசாயிகள் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று மிகப்பெரிய டிராக்டர் பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
இதற்கிடையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்
மூன்று வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. நான்கு பேர் அடங்கிய குழுவையும் அமைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
நீதிபதிகள் கருத்து
நீதிபதிகள் தங்களின் உத்தரவில், இந்த குழு எங்களுக்கானது. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த குழுவில் பங்கேற்கலாம். இந்த குழு எந்த உத்தரவுமோ அல்லது தண்டனையோ விதிக்காது. இந்த குழு எங்களிடம் அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்கும். இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விவரம் அறியவே இந்த குழு அமைத்துள்ளோம்.
பிரச்சினையை தீர்க்க வேண்டும்
பிரச்சனையை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள குழுவை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். தொடர்ந்து போராட வேண்டுமென விவசாயிகள் நினைத்தால் அவர்கள் போராடிக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். இந்த குழு இந்த வழக்கில் ஒரு அங்கம். வேளாண் சட்டங்களை தற்காலிகமாக ரத்து செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன்படி மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த தடைவிதிக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
விவசாயிகள் ஏற்க மறுப்பு
இதுகுறித்து ஆலோசித்த 32 விவசாய சங்கங்களின் தலைவர்கள் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என் கூறி உள்ளனர். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு, போராட்டத்தை முன் கூட்டியே முடிக்கும் திட்டம் இல்லை.வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு ஆதரவானவர்கள்
செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் பல்பீர் சிங் ராஜேவால், இதுபோன்ற எந்தவொரு குழுவின் முன்னும் நாங்கள் ஆஜராக மாட்டோம் என்று நாங்கள் கூறியிருந்தோம். எங்கள் போராட்டம் வழக்கம் போல் தொடரும். இந்த குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மற்றும் அரசாங்கத்தின் சட்டங்களை நியாயப்படுத்தி வந்தனர் என கூறினார்.
உச்சநீதிமன்ற குழு மீது நம்பிக்கையில்லை
செய்தியாளர்களிடம் பேசிய கிரந்திகாரி கிசான் யூனியன் தலைவர், தர்ஷன் பால், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட எந்தவொரு குழுவையும் மத்தியஸ்தத்திற்காக நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி நேற்று இரவு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டோம். சுமைகளை அவர்களின் தோள்களில் இருந்து எடுக்க உச்சநீதிமன்றம் மூலம் ஒரு குழு அமைக்கப்படுவதாக நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து குழு அமைத்த நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 26ஆம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டத்தையும் டிராக்டர் பேரணியையும் நடத்த திட்டமிட்டுள்ளனர் விவசாயிகள்.