உங்கள் செயலுக்கு பாராட்டு.. எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.. பாதுகாப்பு படைக்கு காங்கிரஸ் வாழ்த்து!
தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருக்கிறது.
டெல்லி: தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருக்கிறது.
நேற்று அதிகாலை யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை புகுந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
12 மிராஜ் 2000 ரக விமானங்கள் மூலம் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து நேற்று டெல்லியில் பாஜக சார்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது .
யார் எல்லாம்
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டது. சுமார் 1.30 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சுரி, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த டெரிக் ஓ'பிரைன், காஷ்மீரின் தேசிய கான்பிரன்ஸ் கட்சியை சேர்ந்த ஓமர் அப்துல்லா ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
காங்கிரஸ் பாராட்டு
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த உறுப்பினர் குலாம் நபி ஆசாத் இந்த தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்தார். அதில், இந்த தாக்குதல் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக துணிவாக செயல்பட்டு இந்திய விமானப்படை இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
எப்போதும்
விமான படைக்கு காங்கிரஸ் கட்சி எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. நாங்கள் தீவிரவாதத்திற்கு எப்போதும் எதிராக இருப்போம். தீவிரவாத முகாம்களை சரியாக குறி வைத்து தாக்குதல் நடந்து உள்ளது. இந்த தாக்குதல் கட்சிதமாக நடத்தப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.
காஷ்மீர் மக்கள்
அதே சமயம் காஷ்மீர் மக்களுக்கு நம் மீது வெறுப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அங்கு கடுமையான வெறுப்புணர்வு புகுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் காஷ்மீர் மக்கள் மீது அரசு கனிவாக நடந்து கொள்ள வேண்டும். மக்களுக்கு தேவையான பாதுகாப்புகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று, காங்கிரஸ் கூறியுள்ளது.