சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி
டெல்லி: கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை விரைந்து நிறைவேற்ற பிரதமர் மோடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற 5-வது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் மூலம் காவிரி நதி மேம்பாடு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறினார். தமிழக அரசின் ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி வழங்க கூடாது. மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகாவுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்த்தே முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார் முதல்வர்.
மேலும் தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை விரைந்து ஒதுக்குமாறும் வலியுறுத்தியதாக கூறினார்.
கர்நாடகா காவிரி நீரை திறக்காதது பற்றிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, காவிரி ஆணையத்தின் மூலமே கர்நாடகத்திடமிருந்து நீரை பெற முடியும். கர்நாடக முதல்வரை சந்தித்து பேசினால் காவிரி நீர் திறக்கப்படுமா என்பது சந்தேகமே என்றார்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க பொருளாதார, தொழில்நுட்ப உதவி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம் தவிர தமிழகத்திற்கு வர வேண்டிய மானியம், நிதியை உடனடியாக விடுவிக்கவும் கோரியுள்ளோம் என்றார்
இது தவிர மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிக்கு நிதி ஒதுக்கவும் ராமாதபுரம் ஓசூர் பகுதிகளில் விமான சேவை தொடங்கவும் கடலோர கிராமங்களில் புதைவட மின் கம்பிகள் புதைக்கவும் வலியுறுத்தப்பட்டதாக கூறினார் மேலும் ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் மருத்துவ கல்லூாிகள் அமைக்க அனுமதி வழங்கவும் கோரியுள்ளதாக தெரிவித்தார்
சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு, நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார் முதல்வர்